ராக்கெட் வேகத்தில் முடிச்சிட்டாங்க! பணிகள் ஓவர்.. கோயம்புத்தூரின் அடையாளத்தையே மாற்றும் ஒரு திட்டம்
கோயம்புத்தூர்: கோவைக்கு மேலும் ஒரு பெருமையாக, கோவை, காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை மைதானத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வருகின்ற நவம்பர் 26-ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க உள்ளார் என்று திமுக மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவையில் மாபெரும் செம்மொழிப் பூங்கா அமைக்கும் திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. திட்டத்தின் 90% பணிகள் நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள 10% வேலைகளும் விரைந்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் நான்கு மாதங்களில் இத்தகைய துரிதமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவை செம்மொழி பூங்கா
டாக்டர் நஞ்சப்பா சாலையில் உள்ள 165 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறை மைதானத்தில் இந்தப் பூங்கா கட்டம் வாரியாக உருவாக்கப்படுகிறது. முதல் கட்டமாக, கோவை மத்திய சிறையின் பயன்பாட்டில் இல்லாத 45 ஏக்கர் நிலத்தில், ₹170 கோடி மதிப்பீட்டில் பூங்கா உருவாகிறது. இதற்கான டெண்டர் கடந்த ஜூன் 28 அன்று திறக்கப்பட்டு, பல்வேறு பணிகளுக்கு ஏலம் கோரப்பட்டது.
இந்த மெகா பூங்காவில் பல்லடுக்கு கார் நிறுத்துமிடம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நீர் சேகரிப்பு வசதிகள், அனுபவ மையம், சிற்றுண்டிச்சாலை மற்றும் திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்ட நவீன வசதிகள் இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவை விட பிரம்மாண்டமாக அமையும் என்றும் நவம்பர் 26ல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் அண்ணா சாலையில் ஜெமினி பாலம் அருகே அமைந்துள்ள செம்மொழிப் பூங்கா, ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும். 2010ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தப் பூங்கா, தற்போது தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு காலத்தில் தனியார் ஹோட்டல் இருந்த அரசு நிலத்தை கையகப்படுத்தி இந்தப் பூங்கா உருவாக்கப்பட்டது. தினசரி ஏராளமானோர் இங்கு வருகை தருகின்றனர்.
கோவைக்கு மேலும் ஒரு பெருமையாக, கோவை, காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை மைதானத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்கள், வருகின்ற நவம்பர் 26-ஆம் தேதி பொதுமக்கள்… pic.twitter.com/MMS1RSawXs
— V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@V_Senthilbalaji) November 15, 2025
கோவை செம்மொழிப் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. அதிலிருந்து பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமையின் உதவியுடன் மூலிகை தோட்டங்கள், சிற்பங்கள், மரபணு ஆராய்ச்சி, பாரம்பரிய மரங்கள் மற்றும் இசைக்கருவிகள் தயாரிக்க உதவும் 'இசைத் தோட்டம்' போன்ற பல்வேறு அம்சங்கள் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட உள்ளன.
பணிகள் தீவிரம்
மாநகராட்சியின் தகவல்படி, காந்திபுரம் பகுதியில் சூரிய மின் தகடுகள் நிறுவுதல், சிற்பங்கள் அமைத்தல், மற்றும் சிறிய மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு ₹93.448 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், உக்கடத்தில் உள்ள கோவை மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூங்காவிற்கு குழாய் அமைக்கும் பணிக்கு ₹7.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் 1,000 சதுர அடியில், மாற்றி அமைக்கக்கூடிய இருக்கைகளுடன் கூடிய பல்நோக்கு மாநாட்டு மையம் ₹25.56 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவையில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த செம்மொழிப் பூங்கா, விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்து, நகரின் முக்கிய அடையாளமாக மாறும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications