மொத்த நாடும் அன்னாந்து பார்க்க போகுது.. 10 வருடங்களில் கோவை அடையப்போகும் மெகா வளர்ச்சி
கோவை: தன்னை தானே செதுக்கியவன் வசனம் நடிகர் அஜித்குமாருக்கு பிறகு அதிகம் பொருந்துவது கோவை மக்களுக்காக தான். விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் என்று கோவையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் டேக் ஆஃப் ஆகாமல் இருக்கின்றன. ஆனாலும் தொழிலில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்நிலையில் கோவை அடுத்த 10 வருடங்களில் வளர்ச்சியில் மிகப்பெரிய உயரத்தை எட்டும் என்று எம்பி கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து கோவை மிகப்பெரிய வளர்ச்சியடைந்து வருகிறது. கல்வி, மருத்துவம், தொழில் நிறுவனங்கள், ஐடி துறை, தங்கநகை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கோவை வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இந்தியளவில் வேகமாக முன்னேறும் இரண்டாம் கட்ட நகரங்களில் கோவை முக்கிய இடத்தில் இருக்கிறது.

கோவை வளர்ச்சி
கோவையின் உள்கட்டமைப்பு வசதியும் மேம்படுத்த கோவை விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் காத்திருப்பில் உள்ளன. கோவை விமான நிலையத்தை கடந்த 6 மாதங்களில் 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியுள்ளனர். கடந்த காலங்களை விட விமான நிலையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் கோவை வந்த துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட வளர்ச்சிக்கு தான் உறுதுணையாக இருப்பேன் என்று கூறியிருந்தார். தமிழ்நாடு அரசும் கோவையில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையம், செம்மொழி பூங்கா, தங்க நகை பூங்கா உள்ளிட்ட திட்டங்கள் காத்திருப்பில் உள்ளன.
வரிசை கட்டும் திட்டங்கள்
சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கூறியிருந்தது. தற்போது தனியார் பங்களிப்புடன் ஒண்டிப்புதூர் பகுதியில் ரூ.500 கோடி மதிப்பில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. டிட்கோ மூலம் டெண்டருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. டிசம்பர் - ஜனவரி மாதங்களில் கிரிக்கெட் மைதானம் பணி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஆர்எஸ்புரம் பகுதியில் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.10 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்பம், சர்வதேச தரங்களுடன் மைதானம் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த சில மாதங்களில் செம்மொழி பூங்கா, பெரியார் நூலகம் ஆகியவை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 10 வருடங்களில்
இதுகுறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கூறுகையில், "கோவையின் வளர்ச்சி அடுத்த 10 வருடங்களில் மிகப்பெரிய உயரத்தை எட்டும். அடுத்த 5- 10 வருடங்களில் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த மக்கள் கோவை நகரத்தை நோக்கி வருவதற்கு வாய்ப்புள்ளது. சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களை போல் கோவையும் வளரும்.
எதிர்காலத்தில் மேலும் பல முக்கிய திட்டங்கள் கோவையில் அமல்படுத்தப்படவுள்ளன. பல்வேறு தடங்கல்களுக்கு பிறகு கோவை மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் தொடங்கும். திரைமறைவில் அதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் விமான நிலைய விரிவாக்கப் பணிகளும் தொடங்கவுள்ளது. அடுத்த 5 வருடங்களில் நிச்சயம் சர்வதேச தரத்தை விமான நிலையம் அடையும். அதற்கான அறிகுறிகள் இப்போதே தொடங்கிவிட்டன." என்றார்.












Click it and Unblock the Notifications