கோவை போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு.. களமிறங்கிய நிபுணர் குழு.. அதிரடி மாற்றம்
கோவை: போக்குவரத்து நெரிசல் கோவையின் மிகப்பெரிய பிரச்சனையாக உருவாகி வருகிறது. நாள்தோறும் மக்களை திணறடிக்கும் இந்தப் பிரச்சனையை சரி செய்ய நிபுணர் குழு ஆய்வில் இறங்கியுள்ளது. இதனால் விரைவில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் நகரமாக கோவை மாவட்டம் உள்ளது. ஏற்கனவே குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் இதயமாக கோவை உள்ளது. கடந்த சில வருடங்களாக ஐடி துறையிலும் கோவை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாமல், உலகளவில் பல்வேறு நாடுகள் தங்களின் கிளையை கோவையில் திறந்து வருகின்றன. கோவையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தி வேண்டியுள்ளது. இதனால் கோவை விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டங்கள் காத்திருப்பில் உள்ளன.
கோவையின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகையை விட வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சனையாக உருவாகி வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் கோவைக்கு ஏராளமான மேம்பாலங்கள் அறிவிக்கப்பட்டன.
ஆனால் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவை மாநகரில் யூடர்ன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய சந்திப்புகளில் ரவுண்டானா, மற்றும் சிக்னல்களை தவிர்த்து யூடர்ன் முறைகள் கொண்டு வரப்பட்டன. இதற்கு ஆரம்பத்தில் சற்று வரவேற்பு கிடைத்தாலும், போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வாக அமையவில்லை.
இப்போதும் கூட தினசரி கோவை மாநகர் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறது. முக்கியமாக கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளன. இதனால் காலை, மாலை பிரதான நேரத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. மேலும் சாலை விபத்துகளும் அதிகம் நிகழ்கின்றன.
இந்தப் பிரச்னைக்கு தீர்வு வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதற்கு தீர்வு காணும் வகையில் கோவை மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதனடிப்படையில் மாநகரில் முக்கியமாக உள்ள 15 சந்திப்புகளை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.
இதற்காக அரசு மற்றும் தனியார் அமைப்புகள் அடங்கிய நிபுணர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் நேரடியாக ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து வருகிறார்கள். முதல்கட்டமாக போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சத்திசாலை, விளாங்குறிச்சி, துடியலூர், தடாகம் சாலை பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள், புதிய கட்டமைப்புகள் குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்து அரசுக்கு தங்கள் பரிந்துரைகளை அறிக்கையாக சமர்பிக்கும். அதனடிப்படையில் கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications