சாலை முழுவதும் சகதி.. வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்.. மம்பட்டியை கையிலெடுத்த போலீஸ்.. வைரல் வீடியோ
கோவை: கோவையில் கனமழையால் குண்டும் குழியுமாக இருந்த சாலை ஒன்றை போக்குவரத்து காவலர் ஒருவர் மண்வெட்டி மூலம் சரி செய்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
Recommended Video
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. சாலைகளிலும் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.
மேலும் பல சாலைகளில் தரம் இல்லாததால் அவை பெயர்ந்து கொண்டு சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் கோவை உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

50 சதவீதம்
இந்த மேம்பால கட்டுமானப் பணிகள் 50 சதவீதம் முடிவடைந்த நிலையில், ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பாலத்திற்கான தூண் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாலக்காடு செல்லும் முக்கிய சாலை என்பதால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும்.

பாலம் வேலை
தற்போது மழை பெய்து வரும் நிலையில் பாலம் வேலையும் நடைபெறுவதால் அந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் அவ்வழியாக போகும் இரு சக்கர வாகனங்கள், சைக்கிள்கள் நிலைத்தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து போலீஸார்
இந்த நிலையில் அந்த சாலையை போக்குவரத்து போலீஸார் மண்வெட்டியை வைத்து சீரமைத்துள்ளனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த சாலையில் போக்குவரத்து போலீஸார் ஒருவர் மண்வெட்டியை கையில் எடுத்து அங்கிருந்த சேற்றை வாரி ஒரு புறமாக குவித்தனர். அதன் பின்னர் ஜேசிபி வாகனம் வந்தது.

வைரல்
இந்த வீடியோ வைரலாகி வருவதால் போக்குவரத்து போலீஸாருக்கு பாராட்டுகள் குவிகின்றன. ஏற்கெனவே கடந்த வாரம் வெள்ள பாதிப்பின் போது ஒரு சாக்கடையில் ஏதோ அடைத்துக் கொண்டு தண்ணீர் போக வழியின்றி இருந்த நிலையில் அதை போலீஸார் சரி செய்தனர். சென்னை- கோட்டூர்புரம் சர்தார் பட்டேல் சாலையில் மழை காரணமாக மழை நீர் தேங்கியது. அப்போது நெடுஞ்சாலை துறை ஆராய்ச்சி நிலையம் அருகே மழைநீர் வடிகால் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டது.

மழைநீர்
இதனால் சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு மழை நீர் தேங்கி கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த கோட்டூர்புரம் காவலர் திருமலை, போக்குவரத்து நுண்ணறிவு பிரிவி காவலர் ராஜேஷ் மற்றும் மகாதேவன் ஆகியோர் கைகளாலேயே அந்த அடைப்பை சரி செய்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது.












Click it and Unblock the Notifications