"கோவையின் இதய பகுதி.." அவினாசி சாலையில் வரும் மேஜர் மாற்றம்.. நாளை வெளியே கிளம்பும் முன்பு கவனம்!
கோவை: கோவையின் முக்கிய சாலைகளில் ஒன்று அவினாசி சாலை... இங்கு அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த சாலையின் மேம்பாலப் பணிகள் காரணமாக இப்போது இங்கே போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த சாலைகளில் பயணிப்போர் இதைக் கவனமாக நோட் செய்து கொள்ளுங்கள்.
சென்னை மக்கள் எப்படி வெளியூர் செல்ல ஜிஎஸ்டி சாலை முக்கியமானதாக இருக்கிறதோ.. அதேபோல கோவைக்கு அங்கிருந்து மக்கள் வெளியூர் செல்ல அவினாசி சாலை முக்கியமானது.

இந்த அவினாசி சாலை வழியாகவே திருப்பூர், ஈரோடு, சேலம், சென்னை என பல்வேறு ஊர்களுக்கும் மக்களால் செல்ல முடியும். மேலும், இந்த அவினாசி சாலையில் தான் பல முக்கிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
கோவை அவிநாசி சாலை மேம்பாலம்: இதன் காரணமாக அவினாசி சாலையில் முக்கிய நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக லட்சுமி மில்ஸ், நவ இந்தியா, ஹோப் காலேஜ், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் டிராபிக் நெரிசல் அதிகமாக இருக்கும். காலை மற்றும் மாலை நேரங்களில் இப்பகுதியைத் தாண்டவே அதிக நேரம் ஆகும். கோவைக்கு இந்த டிராபிக் பிரச்சினை மிகப் பெரிய தலைவலியாகவே மாறியது.
இதையடுத்து இங்கு டிராபிக் நெரிசலைக் குறைக்க பீளமேடு கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் சந்திப்பு வரை மேம்பாலம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. 10.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் ரூ.1,621 கோடி செலவில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2020இல் இந்த மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இங்குக் கட்டுமான பணிகளுக்கு ஏற்ப போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இப்போது இங்கு புதிய போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிராபிக் மாற்றம்: கோவை மாநகர், அவினாசி சாலை ஹோப்ஸ் பகுதி ரயில்வே மேம்பாலம் பகுதிகளில் இன்று முதல் உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் லட்சுமி மில்ஸ், காமராஜர் ரோடு, எஸ்என்ஆர் சந்திப்பிலிருந்து அவினாசி செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் Poineer Mill சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி, விளாங்குறிச்சி மேம்பாலம், காந்திமாநகர், தண்ணீர்ப் பந்தல் ரோடு எஸ் பெண்ட் சென்று வலதுபுறம் திரும்பி Tidel Park சாலை வழியாக அவினாசி சாலையை அடையலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவே இந்த போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேம்பாலம்: இந்த கோவை அவினாசி மேம்பாலத்தைப் பொறுத்தவரை இது 305 தாங்கு தூண்களுடன், 17.25 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டு வருகிறது. 4 வழி சாலையாக அமைக்கப்படும் இந்த மேம்பாலத்தில் கோவை அண்ணாசிலை, நவ இந்தியா, ஹோப்கல்லூரி, விமானநிலையம் உள்பட 7 முக்கிய இடங்களில் வாகனங்கள் ஏறவும் இறங்கவும் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் முழுமையாகக் கட்டப்பட்ட உடன் இங்கே போக்குவரத்து பெரியளவில் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மேம்பாலப் பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், இன்னும் சில மாதங்களில் பாலம் முழுமையாகக் கட்டி முடிக்கப்படும் எனத் தெரிகிறது. இன்னும் 6 மாதங்களில் பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications