வேற மாதிரி மாறப்போகும் கோவை வடவள்ளி – மருதமலை சாலை.. வெளியான குட் நியூஸ்
கோவை: கோவை மாநகரம் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டிருக்கிறது. மொத்தமுள்ள 100 வார்டுகள் 5 மண்டலங்களாக பிரித்து நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. கல்வி, தொழில், மருத்துவம், ஐடி என்று பல துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டு கொண்டிருக்கிறது. மருதமலை, சரவணம்பட்டி, துடியலூர் என மாநகர் விரிவடைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வடவள்ளி - மருதமலை சாலை விரிவாக்கம் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறையிடம் இருந்து ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி கொண்டிருக்கிறது. கோவையின் பெரிய பிரச்சனை போக்குவரத்து நெரிசல் தான். கோவை மாநகரில் வசிக்கும் மக்கள் தொகையே 30 லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. தினசரி வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் கோவை வந்து செல்கிறார்கள். மக்களின் எண்ணிக்கையை விட வாகனங்கள் அதிகளவு உள்ளன.

கோவை போக்குவரத்து நெரிசல்
அதனால் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை தீவிரமடைந்து வருகிறது. முக்கியமாக கோவை மாநகர பகுதிகளில் போக்குவரத்து பிரச்சனை வாட்டி வதைக்கிறது. தரமான சாலைகள் இல்லை என்பது மக்களின் புகாராக உள்ளது. போதிய உள்கட்டமைப்பு இல்லாததால் போக்குவரத்து நெரிசல் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. அதை சரி செய்ய மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு முக்கிய சந்திப்புகளில் ரவுண்டானா, யூடர்ன் முறை அமைக்கப்பட்டது.
ஆனாலும் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் மோசமான சாலைகள் இருப்பதாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. குண்டும், குழியுமான பொத்தல் சாலைகளால் ஆங்காங்கே விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. அங்கு முறையான சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
வடவள்ளி - மருதமலை சாலை
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 1,847 சாலைகளை சீரமைப்பதற்காக ரூ. 106.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மைல்கல் பகுதி முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவை மாநகரில் அதிகளவு மக்கள் குடிபெயரும் பகுதியாக வடவள்ளி உள்ளது. மருதமலை கோயில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், சட்டக்கல்லூரி அங்கு தான் உள்ளது.
ஐடி நிறுவனங்களும் அங்கு வரத்தொடங்கிவிட்டன. ஓய்வு பெற்ற மூத்த குடி மக்களும் அங்கு குடிபெயர்ந்து வருகிறார்கள். ஏற்கனவே மருதமலை சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு வடவள்ளி - மருதமலை சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தனர். 4.6 கி.மீ தொலைவிலான சாலையை விரிவாக்கம் செய்ய ரூ.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விரைவில் பணிகள்
நிலம் கையகப்படுத்துலுக்காக ரூ.13.87கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வடவள்ளி - மருதமலை சாலையை விரிவாக்கம் செய்ய கடந்த 2018 ஆம் ஆண்டே பரிந்துரை செய்யப்பட்டது. இருப்பினும் பணிகள் தொடங்கவில்லை. சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. அவ்வபோது விபத்துகளும் நடைபெறுகின்றன.
அங்கு நிலத்தின் மதிப்பு அதிகரித்துள்ளதால் நெடுஞ்சாலைத்துறை கூடுதல் நிதிக்கு பரிந்துரை செய்துள்ளனர். சாலையை விரிவாக்கம் செய்வதுடன், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அங்கு கூடுதலாக புதிய 2 வழிப்பாதை சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளனர். நிலம் கையப்படுத்தும் பணி விரைவில் முடிந்து, ஜனவரி 25 ஆம் தேதிக்குள் பணிகள் தொடங்கும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கூறியுள்ளார். இந்த தகவலால் கோவை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications