பாகப்பிரிவினை செய்யப்படாத நிலம்.. சின்னதா ஒரு டிரிக்ஸ்.. மயிலாடுதுறையில் கோடிகளை குவித்த கோவை பெண்
கோவை: மயிலாடுதுறை வள்ளலார் கோவில் இரட்டை தெருவை சேர்ந்த 75 வயதாகும் நாகராஜனுக்கு ரூ.3 கோடி மதிப்புடைய 2 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை கோவை வடவள்ளியைச் சேர்ந்த 46 வயதாகும் மீனாகுமாரி என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து மயிலாடுதுறையை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு விற்பனை செய்துவிட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் கோவை பெண் மீனாகுமாரி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எப்படி சிக்கினார் என்று பார்ப்போம்.
வாழ்பவர்களுக்கே வாரிசு சான்றிதழ் வாங்கியும், இறக்காதவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வாங்கியும், போலியாக நிலங்களை ஆட்டையைப் போடுவதற்கு பலர் ஸ்கெட்ச் போடுகிறார்கள். அதுவும் பல வருடங்களாக பாகப்பிரிவினை செய்யப்படாத இடங்கள் என்றால் எளிதாக மோசடி செய்துவிடுகிறார்கள்.

அதுவும் மூதாதையர்கள் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்யாமல் இறந்துபோனால் அவர்களின் வாரிசுகள் சொத்துக்களை அனுபவித்து வந்தாலும், கூட்டுநிலம் என்பதால் ஏதாவது ஒரு வகையில் இதை அறியும் மோசடி கும்பல், போலியான வாரிசு சான்றிதழ்கள் வாங்கி, இறப்பு சான்றிதழும் வாங்கி, பலருக்கு சொந்தமான நிலத்தை ஒருவர் மோசடி செய்யும் சம்பவங்கள் நடக்கின்றன. அதுவும் சம்பந்தமே இல்லாத யாரோ ஒருவர் சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி, பத்திரமும் வாங்கி, பட்டா பெயர் மாற்றம் செய்து, மிக சரியாக திட்டமிட்டு வேறு ஒருவருக்கு விற்றுவிடுகிறார். இதை அறியாமல் இருக்கும் குடும்பத்தினர் பலருக்கு சிக்கல் ஏற்படுகிறது.
மயிலாடுதுறை வள்ளலார் கோவில் இரட்டை தெருவை சேர்ந்த 75 வயதாகும் நாகராஜன் என்பவருக்கு மயிலாடுதுறையை அடுத்த வள்ளாலகரம் சின்னநாகங்குடி கிராமத்தில் ரூ.3 கோடி மதிப்புடைய 2 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த 60 வயதாகும் மீனாகுமாரி என்பவர், போலி ஆவணங்கள் தயாரித்து மயிலாடுதுறையை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு விற்பனை செய்திருக்கிறார். இதுகுறித்து நாகராஜன், மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், நாகராஜனின் தந்தை குருமூர்த்தி சாஸ்திரி உள்ளிட்ட 4 பேருக்கு சொந்தமான அந்த இடம் பாகப்பிரிவினை செய்யப்படாமல் பல ஆண்டுகளாக இருந்திருக்கிறது. இதனை வள்ளாலகரத்தை சேர்ந்த சிவராமன் மகன் சுரேஷ் மூலம் கோவையை சேர்ந்த மீனாகுமாரி தெரிந்து கொண்டிருக்கிறார். இதையடுத்து குருமூர்த்தி சாஸ்திரி 1979-ம் ஆண்டு இறந்து விட்டார், இதையடுத்து அவர், தான் ஒருவர் மட்டுமே அவருக்கான வாரிசு என்று போலியாக இறப்பு சான்றிதழ் வாங்கினார். பின்னர் வாரிசு சான்றிதழ்களை மீனாகுமாரி பெற்றாராம்.
தொடர்ந்து மோசடியான முறையில் ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் தயாரித்து போலியாக பட்டாவும் மீனாகுமாரி வாங்கியிருக்கிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ம் தேதி மயிலாடுதுறை சார்பதிவாளார் அலுவலகத்தில் சுரேசுக்கு பத்திரப்பதிவும் செய்து கொடுத்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதி குற்றப்பிரிவு போலீசார் சுரேசை கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த கோவைப் பெண் மீனாகுமாரியை தேடி வந்தார்கள். தற்போது கோவையில் மீனாகுமாரியை குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்து அழைத்து வந்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நீதிபதி கலைவாணி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின்பேரில் கோவை பெண் மீனாகுமாரி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications