அந்த மனசுதான் சார் கடவுள்.. டாக்ஸியில் பெண் விட்டுச்சென்ற நகை, பணம்.. டிரைவர் செய்த சூப்பர் சம்பவம்
கோவை: கோவை கால் டாக்சியில் பெண் ஒருவர் மறதியில் 10 சவரன் தங்க நகை மற்றும் ரூ.10,000 பணத்தை விட்டு சென்றுள்ளார். அவர் பயந்து போய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரிப்பதற்குள்ளேயே நேர்மையான அந்த டாக்ஸி ஓட்டுநர் தானாக முன் வந்து நகை பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
பரபரப்பான வாழ்க்கை முறையில் மறதி மற்றும் கவனக்குறைவு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதனால் மக்கள் பல்வேறு இழப்புகளை சந்திப்பது வாடிக்கையாகி விட்டது. மிகவும் அரிதாக சிலருக்கு மட்டுமே இழந்த பொருட்கள் திருப்பிக் கிடைக்கும். அப்படி ஒரு சம்பவம் கோவையில் நடைபெற்றுள்ளது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மனைவி மதுமிதா. இந்நிலையில் மதுமிதா நேற்று கோவை வந்திருந்தார். அப்போது அவர் கால் டாக்ஸி புக் செய்திருந்தார். சம்பத் குமார் என்பவர் டாக்ஸி ஓட்டுநராக வந்திருந்தார். ஆனால் வேறு பணி காரணமாக அவர் திடீரென்று டாக்ஸி புக்கிங்கை ரத்து செய்து சென்றுவிட்டார்.
அவசர அவசரமாக கிளம்பியதில் மதுமிதா அந்த டாக்ஸி காரின் உள்ளே தன்னுடைய 10 சவரன் தங்க நகை மற்றும் ரூ.10,000 ரொக்க பணம் ஆகியவற்றை மறந்து வைத்து சென்று விட்டார். இதை மதுமிதா மிகவும் தாமதமாக உணர்ந்துள்ளார். இதையடுத்து அவர் டாக்ஸி ஓட்டுநர் சம்பத்தை தொடர்பு கொண்டார்.
ஆனால், சம்பத் குமாருக்கு திருச்சி செல்வதற்கான மற்றொரு புக்கிங் வந்துள்ளது. இதன் காரணமாக அவர் திருச்சி நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறியுள்ளார். நகை மற்றும் பணத்தை தவறவிட்ட மதுமிதாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இதையடுத்து தன் நகை மற்றும் பணத்தை மீட்டுக் கொடுக்குமாறு அவர் ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
மதுமிதா கொடுத்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அதற்குள்ளாக டாக்ஸி ஓட்டுனர் சம்பத் குமார் அவராகவே முன்வந்து, மதுமிதா தவற விட்ட நகை மற்றும் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதை எதிர்பாராத மதுமிதா மற்றும் காவல்துறையினர் ஆச்சர்யமடைந்தனர்.
நகை, பணம் திருப்பிக் கிடைத்த மகிழ்ச்சியில் சம்பத் குமாருக்கு நன்றி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து காவல்துறை ஓட்டுநர் சம்பத் குமாரின் நேர்மையை அங்கீகரிக்க முடிவு செய்தனர். இந்த தகவலை அறிந்த கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உள்ளிட்ட உயரதிகாரிகள் சம்பத்தை நேரில் வரவழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார்கள். இந்த சம்பவம் கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications