ஆன்லைன் ரம்மியால் 7 லட்சத்தை இழந்த இளைஞர்.. தண்டவாளத்தில் தலையை கொடுத்து தற்கொலை
கோவை: இணையதள சூதாட்டத்தில் 7 லட்ச ரூபாய் பணத்தை இழந்த கோவை இளைஞர் மனவேதனையில் ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

இணையதளம் மூலம் சூதாடி பணம் சம்பாதிக்க நினைத்த பலர் சம்பாதித்த அனைத்து பணத்தையும் தோற்று ஒரு கட்டத்தில் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகி வருகிறது.
இது குறித்து புகார்கள் எழவே தமிழக அரசு இணையதள சூதாட்ட ஆப்களுக்கு தடை விதித்தது. தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், ஆப்பில் தமிழகம் இல்லை என்று வேறு மாநிலத்தை மாற்றி கூறி ஆப்பில் விளையாடுவதும் நடப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி விளையாடியவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சூதாட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எல்வின் பிரட்ரிக் என்ற இளைஞர் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் . இந்நிலையில் இணையதளத்தில் ஆர்வமாக விளையாடி வந்த இவர் தொடர்ந்து பணத்தை இழந்து வந்துள்ளார். தமிழக அரசு இணையதள சூதாட்டத்தை தடை செய்த பிறகும் விளையாட்டைத் தொடர்ந்து வந்த அவர் கடந்த 4ஆம் தேதி வரை 7 லட்சத்து 64 ஆயிரம் பணத்தை இழந்துள்ளதாக தெரியவருகிறது.

ரயிலில் பாய்ந்து
இதனால் மனவேதனை அடைந்த அவர் திருப்பூர் வந்து திருப்பூர் வஞ்சிபாளையம் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில் உடல் அடையாளம் தெரியாத நிலையில் ரயில்வே காவல்துறையினர் அவரது புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பினர்-

கோவையில் புகார்
இதனிடையே கோவை பீளமேடு காவல் நிலையத்தில் எல்வின் பிரட்ரிக் என்பவரை காணவில்லை என்ற புகாரின் அடிப்படையில் வந்த புகைப்படத்துடன் ஒத்து போயிருந்த சூழ்நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது பிரேத பரிசோதனைக்காக இறந்தவரின் உடல் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இணையதள சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏமாற்று வேலை
ஆன்லைன் சூதாட்டம் குறித்து முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இணையதளம் மூலம் விளையாடப்படும் சூதாட்டத்தில் பொதுமக்களில் ஒருவர்கூட ஜெயிக்க முடியாது. அப்படி ஜெயித்ததாக கூறுபவர் அந்த சூதாட்ட நிறுவனத்தைச் சேர்ந்த நபராகவே இருப்பார். இணையதள சூதாட்டத்தில் பங்கேற்கும் மக்களுக்கு இது புரிவதில்லை. இணையதள சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள், தற்கொலை செய்தவர்கள் என பல உதாரணங்களை சொல்ல முடியும். இணையதள சூதாட்டத்தில் ஜெயித்து வாழ்வில் முன்னேறிவிட்டேன் என்று ஒருவரைக்கூட உதாரணமாக சொல்ல முடியாது. இணையதள சூதாட்டத்தில் நாம் ஜெயிக்க முடியாது என்பதுதான் உண்மை என்றார்..












Click it and Unblock the Notifications