கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.90 லட்சம் இழந்த இளைஞர்! பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை! கோவையில் ஷாக்
கோவை: கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.90 லட்சம் இழந்த இளைஞர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட பகீர் சம்பவம் நடந்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள கிழவன்புதூரைச் சேர்ந்தவர் சபாநாயகம்.. 35 வயதான இவர், அப்பகுதியில் கார் டீலராக இருந்து வந்தார்.
மேலும், இவர் ஆன்லைன் வழியாக கிரிக்கெட் சூதாட்டத்திலும் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கார் டீலராக சம்பாதித்த அத்தனையை தொகையையும் வைத்து கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

விரக்தி: அத்துடன் நிற்காமல் கடன் வாங்கியும் கிரிக்கெட் சூதாட்டத்தில் இவர் ஈடுபட்டுள்ளார். இருப்பினும், அவருக்கு எதிர்பார்த்த அளவுக்குச் சூதாட்டத்தில் பணம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. போட்ட பணமெல்லாம் போய்விட்டது. ஒரு கட்டத்தில் இவருக்குக் கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்கத் தொடங்கியுள்ளனர். போட்ட பணம் போய்விட்டது, கடனை கொடுத்தவர்களும் கேட்கத் தொடங்கியதால் விரக்தியடைந்த சபாநாயகம், ஒரு வேலை விஷயமாகக் கோவை சென்று வருவதாகக் கூறி வீட்டில் இருந்து கிளம்பிவிட்டார்.
கடந்த ஏப்.14ஆம் தேதி அவர் கோவைக்கு வந்த நிலையில், காந்திபுரம்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ரூம் போட்டுள்ளார். மறுநாள் அதிகாலையில் வீட்டை காலி செய்வதாகச் சபாநாயகம் ஹோட்டல் ஊழியர்களிடம் கூறியிருந்தார். இருப்பினும், அவர் அறையை காலி செய்யவில்லை. மேலும், காலையில் நீண்ட நேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை.
ஹோட்டல் ஊழியர்கள் கதவைத் தட்டிய போதிலும் அவர் திறக்கவில்லை. மேலும், அவரது மொபைல் போனுக்கு ஹோட்டல் ஊழியர்கள் கால் செய்ய முயன்ற போது, அது ஸ்விட்ச் ஆப் என்றே வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் தங்களிடம் இருந்த மாற்றுச் சாவியைப் பயன்படுத்தி உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது சபாநாயகம் பாத் ரூம் அருகே அசைவற்று கிடந்துள்ளார்.. இதனால் பதறிய ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தற்கொலை: அங்கு வந்த அவரை பரிசோதித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சபாநாயகம் பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் உயிரிழந்து சுமார் 5 மணி நேரத்திற்குப் பின்னரே ஹோட்டல் ஊழியர்கள் அவரது உடலைக் கண்டறிந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. கிரிக்கெட் சூதாட்டத்தில் அவர் ரூ.90 லட்சம் வரை இழந்ததும் தெரிய வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவும் கடன் நெருக்கடி காரணமாகவும் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் எழுதி வைத்த கடிதத்தையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
அதில் அவர், "எனது முடிவுக்கு நானே தான் காரணம். ரூ.90 லட்சம் தொகையை கிரிக்கெட் சூதாட்டத்தில் இழந்து விட்டேன். அம்மா, அப்பாவை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். தங்கையும், அவரது கணவரும் என்னை மன்னித்து விடுங்கள்" என்று எழுதி வைத்துள்ளார். அவர் தனது கடிதத்தில் சிலரது பெயரை எழுதி, பின் அடித்துள்ளார். அது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை தீர்வு இல்லை: எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீர்வு இல்லை. தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050
ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.












Click it and Unblock the Notifications