லவ் மேரேஜ்தான் சார்.. ஆனா என் மனைவிக்கு நான் கணவர் இல்ல.. கோவையை குழப்பிய சம்பவம்
கோவை: கோவை மாவட்டத்தில் காவல் ஆணையர் அலுவலகத்தில் தான் காதலித்து திருமணம் செய்த மனைவி மீது கணவர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் என்பது ஒரு அழகான உணர்வு. காதலை சொல்வதற்கே பெரிய மெனக்கெடல்கள் தேவை, அதை திருமணம் வரை கொண்டு செல்ல மாபெரும் உழைப்பு தேவை. காதல் மட்டுமல்ல காதல் திருமணம் என்பதும் எல்லோருக்கும் கைகூடி விடுவதில்லை. அந்த வகையில் எல்லா பிரச்னைகளையும் தாண்டி திருமணத்துக்குள் நுழைந்தாலும் அதில் வெற்றி பெறுவது என்பது மிகச் சில நபர்களே. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உயிருக்கு உயிராக காதலித்து அதனை திருமணம் வரை கொண்டு சென்றுள்ள ஒரு தம்பதியின் வாழ்வில் தற்போது புயல் வீசியுள்ளது.

காதல் திருமணம் செய்து கொண்ட மனைவி தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், தான் ஏமாற்றப்பட்டதாகவும், வீட்டிற்கு கூட செல்ல முடியாமல் ஹோட்டலில் ரூம் எடுத்து தனது பாட்டி மற்றும் தாயுடன் தங்கியுள்ளதாகவும் கணவர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தனது தாய் மற்றும் பாட்டியுடன் வந்து புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி அசோகாதேவி. இவர்கள் இருவரும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். பின்னர், ராமநாதபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளனர். மிகவும் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியுள்ளது.
அசோகாதேவிக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணமாகியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரிடமிருந்து பிரிந்து முறையாக விவாகரத்துப் பெறாமல் இருந்துள்ளார். ஏற்கனவே திருமணமாகிய விஷயத்தை செந்தில்குமாரிடம் தெரிவிக்காமல் முழுமையாக மறைத்துவிட்டு தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், இதனை நான் அறிந்து கொண்ட நாள் முதல் தன்னையும், தனது அம்மா, பாட்டி ஆகியோரை அசோகாதேவி கொடுமைப்படுத்துவதாக செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் செந்தில்குமார் புகார் அளித்துள்ளார். மேலும், ஏற்கனவே திருமணமான விஷயம் குறித்து ஏதேனும் கேட்டால் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து விடுவேன் என்று கூறி மிரட்டுவதாகவும் தனது தாயார் மற்றும் பாட்டியுடன் வந்து செந்தில்குமார் புகார் மனு அளித்தார்.
அசோகாதேவிக்கு ஏற்கனவே திருமணமானதை அவரது குடும்பத்தினரும் தன்னிடம் கூறாமல் மறைத்து விட்டதாகவும், அந்த குடும்பத்தினரும் தன்னை மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ள அவர் அசோகாதேவி மற்றும் அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அசோகாதேவியின் கொடுமையை தாங்க முடியாமல் சில தினங்களாகவே தானும் தனது அம்மா மற்றும் பாட்டி நாங்கள் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருப்பதாகவும், இதனால் சரிவர உணவு, மருந்து எதுவும் எடுத்துக் கொள்ள முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications