கிருத்திகை: மருதமலைக்குப் போறீங்களா?.. இதை கண்டிப்பா நோட் பண்ணுங்க மக்களே
கோவை: கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கிருத்திகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) செல்ல திட்டமிட்டுள்ள பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கோவையின் நகர் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் அமைந்துள்ளது மருதமலை. இப்பகுதியில் மருத மரங்கள் நிறைந்து காணப்படுவதால் மருதமலை என்று அழைக்கப்படுகிறது. மருதமலை மேல் அமைந்துள்ள முருகப்பெருமானின் கோயில் அந்த காலத்தில் கொங்கு வேட்டுவ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. மருதமலை முருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை பராமரித்து வருகிறது.

மருதமலை முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். விஷேச நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மருதமலையில் அமைந்துள்ள முருகன் கோவிலை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியாகும். 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருக்கோயில் முருகப்பெருமானின் ஏழாம் படை வீடாகக் கருதப்படுகிறது. பேரூர் புராணம், திருப்புகழ் மற்றும் காஞ்சிப் புராணங்களில் மருதமலை சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி மருதாசலபதி, மருதப்பன், மருதமலையான் என பல பெயர்களால் போற்றப்படுகிறார்.
இக்கோயிலில், சித்திரை மாதத்தில் தமிழ் வருடப் பிறப்பு, வைகாசி மாதத்தில் வைகாசி விசாகம், ஆடி மாதத்தில் ஆடிக் கிருத்திகை மற்றும் ஆடி பதினெட்டு, ஆவணியில் விநாயக சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் என விழாக்கள் வெகுசிறப்பாக நடைபெறுகின்றன. கார்த்திகை தீபம், ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பூச விழா, வள்ளிதெய்வானை திருக்கல்யாணம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற நிகழ்ச்சிகளும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
இந்நிலையில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கிருத்திகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) விடுமுறை நாளை முன்னிட்டு பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: மருதமலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதியன்று கிருத்திகை மற்றும் ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிவார்கள்.
பக்தர்கள் அதிக அளவில் வருவதைக் கருத்தில் கொண்டு மேற்படி நாளில் மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. இரண்டு சக்கர வாகனங்கள் மூலமாகவும், மலைப்படிகள் வழியாகவும், திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications