ரீ-என்ட்ரி கொடுத்த சேனாதிபதி மகள்: இளம் பெண் கவுன்சிலர் நிவேதா கோவை மாமன்ற உறுப்பினராக தொடர ஒப்புதல்
கோவை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட கோவை மாநகராட்சியின் இளம் பெண் கவுன்சிலரான நிவேதா சேனாதிபதி மீண்டும் மாகநராட்சி கவுன்சிலராக தொடர மாநகர கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
கோவை மாநகராட்சி 97வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருப்பவர் நிவேதா. கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களிலேயே இளம் பெண் கவுன்சிலர் நிவேதா தான். 22 வயது கல்லூரி மாணவியாக தேர்தல் களத்தைச் சந்தித்து வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினர் ஆனார் நிவேதா.

நிவேதா சேனாதிபதி: நிவேதா, திமுக கோவை கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் ஆவார். நிவேதா தேர்தலில் களமிறங்கும்போதே மேயர் பதவிக்கு வருவார் என்ற பேச்சுகள் எழுந்தன. கோவை மாநகராட்சி தேர்தலில் திமுக 100க்கு 96 இடங்களில் வென்ற நிலையில், திமுக சார்பில் கல்பனா கோவை மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து இளம் கவுன்சிலரான நிவேதா சேனாதிபதி, மாநகராட்சி கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். கடந்த 3 மாநகராட்சி கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்காததால் கவுன்சிலர் தகுதியை இழக்கும் சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து 3 மாமன்ற கூட்டங்களில் பங்கேற்கவில்லை எனில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(1)இன் படி பதவி பறிபோகும்.
தகுதி இழப்பு: அந்தவகையில், கோவை மாநகராட்சியில் 97வது வார்டு திமுக பெண் கவுன்சிலரான நிவேதா சேனாதிபதி கடந்த ஜனவரி, மார்ச், மே ஆகிய மூன்று மாதங்களில் நடைபெற்ற மாமன்றக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்காததை தொடர்ந்து நிவேதா, மாமன்ற உறுப்பினர் தகுதியை இழக்கிறார் என அறிவிக்கப்பட்டது.
அதேசமயம், கூட்டங்களில் பங்கேற்காதது குறித்து விளக்கம் ஏதாவது தெரிவித்து இருந்தால் மாநகராட்சி ஆணையாளர் அதனை வெளியிடுவார். அக்காரணத்தை தொடர்ந்து தகுதி இழந்தவர்கள் மீண்டும் தொடர்வது குறித்து மாமன்ற கூட்டம் முடிவு செய்யும்.
மீண்டும் என்ட்ரி: அந்தவகையில், நிவேதா சேனாதிபதியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர் மாமன்ற கூட்டங்களில் பங்கேற்காததற்கு தனக்கு உடல்நிலை சரியில்லாததே காரணம் என விளக்கம் அளித்து, தன்னை மாநகர கவுன்சிலராக தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து மாநகராட்சி கவுன்சிலில் நிவேதாவின் பதவியை தொடரச் செய்யலாமா என்பது குறித்து மாமன்ற உறுப்பினர்களிடையே விவாதிக்கப்பட்டது.
97வது வார்டு கவுன்சிலராக எஸ்.நிவேதா சேனாதிபதியை மீண்டும் நியமிக்க கோவை மாநகராட்சி கவுன்சில் இன்று ஒருமனதாக ஒப்புக்கொண்டது. இதையடுத்து, மாநகராட்சி கவுன்சிலராக நிவேதா சேனாதிபதி தொடர்கிறார். மாமன்ற கவுன்சிலின் ஒப்புதலுக்குப் பிறகு இன்று நடைபெற்ற கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிவேதா பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications