வந்தாச்சு தீபாவளி.. கோவைக்கு அக்டோபர் 26 ரொம்ப முக்கியம்.. காவல் துறை முக்கிய அறிவிப்பு
கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால் நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அக்டோபர் 26 ஆம் தேதி முதல் எந்தெந்த வழியாக வாகனங்கள் செல்லலாம் என்று கோவை மாநகர காவல் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கடைவீதிகளில் ஆடைகள் வாங்க பொதுமக்கள் குவிந்துள்ள நிலையில் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகை நடப்பு ஆண்டில் வரும் அக்டோபர் 31 தேதியன்று கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. வியாழக்கிழமை அன்று இந்த முறை தீபாவளி வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, இந்த முறை தீபாவளிக்கு வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது.

தீபாவளிக்காக பொதுமக்கள் பலரும் ஷாப்பிங்கில் இறங்கியுள்ளனர். நகரப் பகுதிகளில் தீபாவளி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கடைவீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலை மோதுகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு வாகனங்கள் அக்டோபர் 26 ஆம் தேதி முதல் கீழ்கண்ட சாலைகள் வழியாக செல்ல வேண்டும் என்று கோவை மாநகர காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(1) ஒப்பணக்கார வீதி வழியாக காந்திபுரம், அவினாசி சாலை மற்றும் திருச்சி சாலை செல்லும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் உக்கடம் சந்திப்பிலிருந்து வலது புறம் திரும்பி சுங்கம் புறவழிச் சாலையை அடைந்து வாலாங்குளம், கிளாசிக் டவர் சந்திப்பை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
(2) ஒப்பணக்கார வீதி வழியாக மேட்டுப்பாளையம் சாலை மற்றும் தடாகம் சாலை நோக்கி செல்லும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் உக்கடம் சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி பேரூர் புறவழிச்சாலை வழியாக செல்வபுரம் ரவுண்டானா, செல்வபுரம் மேல்நிலைப் பள்ளி சந்திப்பில் வலது புறம் திரும்பி செட்டிவீதி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சலிவன் வீதி வழியாக காந்திபார்க்கை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
(3) கிராஸ்கட் ரோடு வழியாக வடகோவை, சிந்தாமணி, ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி செல்லும் வாகனங்கள் கிராஸ்கட் ரோடு வழியாக செல்லாமல் 100 அடி ரோடு, வடகோவை சிவானந்தாகாலனி வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
(4) மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பார்க் கேட், LIC. அண்ணா சிலை, லட்சுமி மில் வழியாகத்தான் செல்ல வேண்டும். அதே வழியாகத்தான் திரும்பவும் வரவேண்டும் நகருக்குள் வர அனுமதி இல்லை.
(5) ஒப்பணக்கார வீதி மற்றும் ராஜ வீதி பகுதிக்கு பொருட்கள் வாங்க வரும் பயணிகளை ஏற்றி வரும் ஆட்டோ மற்றும் கால் டாக்சிகள் ஒப்பணக்கார வீதி போத்தீஸ் சந்திப்பு வழியாக செல்லாமல். ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி சந்திப்பில் இடது புறம் திரும்பி வைசியாள் வீதி, கருப்பக் கவுண்டர் வீதி, ராஜ வீதி வழியாக ஒப்பணக்கார வீதி லாலா கார்னரில் பயணிகளை இறக்கி விடவேண்டும். மேலும், சரவணா செல்வரத்தினம் முன்பும். ஐந்து முக்கு பகுதியிலும் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.
(6) கிராஸ்கட் ரோடு மற்றும் நஞ்சப்பா ரோடு பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை முடியும் வரை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கும், வாகன நிறுத்தத்திற்கும் ஒத்துழைப்பு தருமாறு கோவை மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். அதேபோல, குற்றத் தடுப்பு நடவடிக்கைக்காக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
செல்போன் திருட்டு, கைப்பை திருட்டு மற்றும் ஜேப்படி உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கோவை மாநகரில் டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி - இராஜ வீதி சந்திப்பு (லாலா கார்னர்), பிரகாசம் பேருந்து நிறுத்தம், டாக்டர் நஞ்சப்பா சாலை (சுப்பு மெஸ்).
கிராஸ்கட் ரோடு (மஹாவீர் டெக்ஸ்டைல்ஸ்) மற்றும் கிராஸ்கட் ரோடு புறக்காவல் நிலையம் ஆகிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் குற்ற விழிப்புணர்வு குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் அவசர உதவிக்கு கோவை மாநகர காவல் துறையை 0422-2300970 என்ற எண்ணிற்கோ 81900 00100 என்ற வாட்சப் எண்ணிற்கு அல்லது அவசர தொலைபேசி எண் 100-க்கோ தொடர்பு கொள்ளலாம். தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அவசர கால எண்களான 100 அல்லது 101 அல்லது 2300101 (கோவை தெற்கு). 2450101 (கோவை வடக்கு). 2511001 (பீளமேடு) மற்றும் 2595101 (கணபதி) என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications