"ஒன்றியம், திராவிட மாடல்னு சொல்றீங்க.. மக்களுக்கு என்ன பயன்?" திமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் கேள்வி
கோவை: தேமுதிக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக அரசைக் கடுமையாகச் சாடினார்.
Recommended Video
கோவையில் தேமுதிக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் கோவை வேலாண்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு விவகாரங்கள் குறித்து திமுக அரசைச் சாடி பேசினார்.

பிரேமலதா விஜயகாந்த்
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "கோவை சாய்பாபா காலணி தேமுதிக அவைத்தலைவர் ரமேசின் மனைவி விபத்தில் உயிரிழந்தார். கனரக வாகனம் ஒன்று தான் இந்த விபத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பிட்ட நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் போக்குவரத்து விதி முறைகளை மீறி கனரக வாகனங்கள் மாநகர பகுதியில் இயங்குவதால் இம்மாதிரியான விபத்துகள் ஏற்படுகிறது. இது குறித்து கோவை மாநகராட்சி கவனத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள போக்குவரத்திற்கு ஏற்ப தடாகம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

மக்களுக்குப் பயனில்லை
தேர்தல்களில் முதல்வர்கள், அமைச்சர்கள் மட்டும் தான் மாறுகின்றனர். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. திமுக மாடல், ஓராண்டு சாதனை என திமுகவைச் சேர்ந்தவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். இந்த ஓராண்டில் எந்த சாதனையும் நடைபெறவில்லை. ஒன்றியம், திராவிட மாடல் மாடல் என்ற வார்த்தைகளால் மக்களுக்கு எந்த ஆதாயமும் இல்லை.

சட்டம் ஒழுங்கு
சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மோசமாகவும், கேள்விக் குறியாகவும் உள்ளது. விசாரணை என அழைத்துச் சென்று கொலை செய்யக் கூடிய அளவில் தான் தற்போது மாநிலத்தில் சட்ட ஒழுங்கு உள்ளது. இதை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். கடந்த ஓராண்டில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்றப்படவில்லை . தெருவிற்கு 10 டாஸ்மாக் திறக்கிறார்கள்.

செந்தில் பாலாஜி
வேலை வாய்ப்பை கொடுக்கும் வகையில் மாவட்டத்திற்கு ஒரு தொழிற்சாலை கூட திறக்கப்படுவதில்லை. நடந்த உள்ளாட்சித் தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றியை வாங்கினார். இதைத் தவிர அவர் வேறென்ன செய்தார் என மக்களிடமே கேளுங்கள். தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக மட்டும் திமுகவினர் வருகின்றனர். ஆனால் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட எதுவும் செய்து தரவில்லை" என்று அவர் கடுமையாகச் சாடி பேசினார்.












Click it and Unblock the Notifications