கருணை ஆட்சியா? காட்டாட்சியா? எதுவேண்டும்... - திமுக, காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக சாடிய மோடி
தமிழகத்திற்கு தேவை கருணை ஆட்சியா? காட்டாட்சியா? எது வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தாலே மக்களுக்கு கொடுமைகளும் தொல்லைகளும் அதிகரிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கோவை: திமுகவும், காங்கிரஸ் கட்சிகளும் ஊழலில் ஊறிய கட்சிகள். தங்களின் சட்டை பையை நிரப்பி கொள்ளவே, தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுயலாபம் மட்டுமே எதிர்க்கட்சிகளின் இலக்கு என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
Recommended Video

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் படுபரப்படைந்துள்ளது. பிரதமர் மோடி தமிழகத்தில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை கோவையில் தொடங்கியுள்ளார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழர்களின் பெறுமையையும், விவசாயிகள், சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு செய்துள்ள நலத்திட்டங்களை பட்டியலிட்ட மோடி, திமுக, காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக சாடினார்.
நம்முடைய தேசம் இரண்டு விதமான அரசியலை கொண்டுள்ளது ஒன்று கருணை ஆட்சி மற்றொன்று காட்டாட்சி. தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சி மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வரும் போது மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர். காங்கிரஸ் கட்சியும் திமுகவும் ஊழலில் ஊறிய கட்சிகள். தங்களின் சட்டைப்பையை நிரப்புவதற்காக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை திமுக எப்படி நடத்தியது என்பதை தமிழ்நாடு அறியும். சுயலாபம் மட்டுமே எதிர்க்கட்சிகளின் இலக்கு. திமுகவும் காங்கிரஸ் கட்சியும் எப்படி கொள்ளையடிப்பது என சிந்திக்கின்றனர் என்று கூறிய மோடி, திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சமூக விரோதிகளை தங்கள் பக்கம் வைத்து கொள்கின்றனர் என்றும் மோடி குற்றம் சாட்டினார்.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மூர்க்கத்தனமான அரசியலை முன்னெடுக்கின்றன. சொந்த குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான் அவர்களின் தேவை. திமுக ஆட்சிக் காலத்தின் மின்வெட்டை நீங்கள் மறந்துவிட்டீர்களா? என்று கேட்டார் மோடி.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நோக்கம் தமிழகத்தினை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான். ஒட்டுமொத்த தமிழகத்திற்குமான கட்சி என்ற தகுதியை திமுக இழந்து விட்டது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications