தேர்தலுக்கு முன் பேரூராட்சியை தட்டி தூக்கிய திமுக..செந்தில் பாலாஜி வியூகத்தால் அதிர்ச்சியில் அதிமுக
கோவை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறாத நிலையில் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஒரு பேரூராட்சியை திமுகவினர் ஒட்டுமொத்தமாக கைப்பற்றியுள்ளது அதிமுகவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் வேட்பு மனு தக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ளயதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் வாக்களர்களை கவர வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
2021 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் திமுக அமோகவெற்றி பெற்றாலும், கொங்கு மண்டலத்தில் தோல்வியை சந்தித்தது. அதிலும் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறவில்லை. இதையடுத்து கோவையில் தனிக்கவனம் செலுத்திய திமுக தலைவர் ஸ்டாலின், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை திமுகவுக்கு பொருப்பாளராக நியமித்துள்ளார். தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்.

அதிர்ச்சி வைத்தியம்
இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு முன்பே தங்கள் கோட்டை என கூறிக்கொள்ளும் அதிமுகவினருக்கு கோவை மாவட்டத்தில், வாக்குப் பதிவுக்கு முன்பே ஒரு பேரூராட்சியையே கைப்பற்றி அதிர்ச்சி வைத்தியத்தை அளித்திருக்கிறது திமுக. பொள்ளாச்சியை அடுத்த பெரிய நெகமம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், வார்டு எண் 3, 6, 7, 8, 9, 11, 12, 14,15 ஆகிய 9 வார்டுகளில் 8 தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளரை எதிர்த்து தாக்கல் செய்திருந்த அனைத்து வேட்பாளர்களும் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

திமுக வேட்பாளர்கள் வெற்றி
இதன் காரணமாக 3வது வார்டில் எம்.பிரியா, 6வது வார்டில் ஜெ.பரமேஸ்வரி, 7வது வார்டில் என்.தேவிகா, 8வது வார்டில் கே.நந்தவேல்முருகன், 11வது வார்டில் ஆர்.கஸ்தூரி, 12வது வார்டில் டி.கலைமணி, 14வது வார்டில் ப.நாகராஜ் 15வது வார்டில் ஆர்.சபரீஸ்வரன் என 8 தி.மு.க. வேட்பாளர்களும், 9வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் ஆர்.ரவி என்பவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் மொத்தமுள்ள 15 வார்டுகளில் பெருபான்மை வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றதால் நெகமம் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.

பின்னணியில் செந்தில் பாலஜி
வார்டு எண் 1. 2, 4, 5, 10, 13 ஆகிய 6 வார்டுகளில் மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து திமுகவினர் கூறும் போது தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து முதல்வர் மக்களுக்காக இரவு, பகலாக உழைத்து வருகிறார். அவரது நல்லாட்சியின் மேல் நம்பிக்கை வைத்து மக்கள், பெரிய நெகமம் பேரூராட்சியின் வெற்றியை தி.மு.க.வுக்கு பரிசாக அளித்துள்ளனர் என தெரிவித்துள்ளனர். இதன் பின்னணியில் கோவை மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications