"மூலவர் ஸ்டாலின்.. நீங்க உற்சவர்.." புகழ்ந்து தள்ளிய ஆ ராசா.. அப்போ உதயநிதி ரியாக்சனை பாருங்க.. அடடே
கோவை: நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியை திமுக எம்பி ஆ ராசா பாராட்டித் தள்ளினார். அவரது பேச்சு பலரையும் கவனிக்க வைத்தது.
கோவை சரவணம்பட்டி பகுதியில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் தொடங்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் உதயநிதி, நேரு மற்றும் திமுக எம்பி ஆ ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் புதிய திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த உதயநிதி, அரசு நலத்திட்டங்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆ ராசாவின் பேச்சு பலரையும் கவனிக்க வைப்பதாக இருக்கிறது.
ஆ ராசா: தற்போது அமைச்சர்களாக இருக்கும் பலரும் கருணாநிதி முதல்வராக இருந்த போதும் உடனும் பயணித்தவர்கள், இப்போது ஸ்டாலின் முதல்வராக இருக்கும் போதும் உடன் பணிக்கிறோம் என்று கூறிய அவர், வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்குத் தேவையான முதலீடுகளைப் பெறுவதில் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக எம்பி ஆ ராசா மேலும் பேசுகையில், "இந்த நிகழ்ச்சியைப் பார்த்தாலே மலைப்பாகவும் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நானும் அமைச்சர் நேரு உள்ளிட்டோரும் கருணாநிதி முதல்வராக இருந்த போது அவருடன் பயணித்தவர்கள். இப்போதைய முதல்வர் ஸ்டாலின் உடனும் பணித்தவர்கள். அந்த வகையில் தற்போது தம்பி உதயநிதி உடனும் பயணித்து வருகிறோம்.
மூலவர்- உற்சவர்: கருணாநிதி முதல்வரா இருந்த போது, ஸ்டாலின் தான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது ஸ்டாலின் செயல்பாடுகளை எல்லாம் நாங்கள் கருணாநிதியிடம் சொல்வோம்.. அப்படிச் சொல்லும் போது, "நீங்கள் (கருணாநிதி) மூலவர்.. அதேநேரம் உற்சவராக அவர் (ஸ்டாலின்) செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். மாநிலத்தில் எங்குச் சென்றாலும் அவருக்கு வரவேற்பு இருக்கிறது" என்று சொல்வோம்.
அதன் தொடர்ச்சியாக தற்போதைய முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளைப் பெற வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். முதலீடுகளைப் பெற ஸ்டாலின் அங்கு இருப்பதால் அவர் மூலவர்.. அதேநேரம் உற்சவராக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி இங்கு வந்துள்ளார். உங்கள் வரவேற்பைப் பெற்றுள்ளார்.. நான் அவரை பார்க்கும் போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
மகிழ்ச்சி: கருணாநிதியைப் பார்த்து, ஸ்டாலினைப் பார்த்து, இப்போது அவர்களைப் போலவே இருக்கும் இந்த உற்சவரைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கிருந்தபடியே மூலவருக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். இந்த உற்சவரை வாழ்த்த கடமைப்பட்டுள்ளேன். திமுக கோவைக்கு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. அதில் எனது நீலகிரி தொகுதிக்கும் கணிசமான நலத்திட்டங்கள் கிடைத்துள்ளது. அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல பெரம்பலூருக்கு 300 கோடி ரூபாய் குடிநீர் திட்டத்தைக் கொடுப்பதாக அமைச்சர் கே.என்.நேரு செய்து கூறியிருந்தார். அதையும் அவர் விரைவில் செய்து தர வேண்டும் என்பதை இந்த இடத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன்" என ஆ.ராசா பேசினார்.
உதயநிதி ரியாக்சன்: முதல்வர் ஸ்டாலின் மூலவர்.. உதயநிதி உற்சவர் என்று ஆ ராசா பேசும் போது உதயநிதி மேடையில் தான் இருந்தார். திடீரென தன்னை புகழ்ந்து பேசுவதைக் கேட்ட உதயநிதி, சிரித்துக் கொண்டே மேடையில் இருந்தார். ஆ ராசாவின் இந்தப் பேச்சு இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications