சூலூர் தொகுதி இடைத்தேர்தல்: சொந்த காசில் சூனியம் வைக்கிறது திமுக?
Recommended Video
கோவை: சூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவு நிச்சயம் தங்களுக்கு சாதகமாக இருக்கப் போவது இல்லை என்று திட்டவட்டமாக நம்புகின்றனர் திமுகவினர். இதற்குக் காரணமே சூலூர் தொகுதி வேட்பாளராக பொங்கலூர் பழனிசாமியை அறிவித்ததுதானாம்.
சூலூர் புதியதாக உருவாக்கப்பட்ட தொகுதியாகும். இது பல்லடம் மற்றும் பொங்கலூர் தொகுதிகளுக்குள் இருந்து வந்தது.
1971-ம் ஆண்டு பொங்கலூர் தொகுதியாக இருந்தபோது பொங்கலூர் பழனிசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் பிறகு இதே தொகுதியில் 2 முறை பொங்கலூர் பழனிசாமியும் ஒருமுறை அவரது மனைவியும் போட்டியிட்டனர்.

பொங்கலூரார் கொந்தளிப்பு
ஆனால் சூலூர் தொகுதி மக்கள் பொங்கலூர் பழனிசாமி குடும்பத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்டனர். இதனால் கொந்தளித்து கிடந்தார் பொங்கலூரார்.

ரஜினி குடும்ப உறவினர்
1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவின் பொன்முடி இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அண்மையில் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா மறுமணம் செய்த விசாகன் குடும்பத்தைச் சேர்ந்தவர் பொன்முடி.

அமைச்சராக பொங்கலூரார்
அப்போது சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற பொங்கலூர் பழனிசாமி அமைச்சரானார். தம்மையும் குடும்பத்தையும் வெற்றி பெற வைக்காத சூலூர் மக்கள் மீது கடும் கோபத்தையும் பாராமுகத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

மீண்டும் வேட்பாளர்
இதனால் சூலூர்வாசிகளும் சுல்தான்பேட்டை மக்களும் பொங்கலூர் பழனிசாமிக்கு எதிராக கங்கணம் கட்டிக் கொண்டு காத்திருந்தனர். இந்த நிலையில்தான் தற்போது சூலூர் தொகுதியின் வேட்பாளராக பொங்கலூர் பழனிசாமி களம் இறங்கியிருக்கிறார்.

கொங்கு அமைச்சர் கனவு
பொங்கலூராரைப் பொறுத்தவரையில் இம்முறை எப்படியும் திமுக ஆட்சி அமைத்துவிடும். கொங்குமண்டலத்தில் தாம் தனி ஒருவராக ஜெயித்தால் கட்சி மற்றும் ஆட்சியில் முக்கிய இடம் கிடைத்துவிடும் என்பது கணக்கு. பொங்கலூர் கணிசமாக செலவு செய்வார் என்பதால் திமுக தலைமையும் சரி என ஒப்புக் கொண்டுவிட்டது.

தோல்வி உறுதி?
ஆனால் சூலூர் களத்தில் பொங்கலூர் பழனிசாமியைவிட அதிகமாக செலவு செய்யக் கூடிய திமுக பிரமுகர்கள் இருக்கின்றனர். அவர்களை பற்றி திமுக தலைமை கண்டுகொள்ளவில்லை. இதனால் உட்கட்சியில் கடும் அதிருப்தி. ஜாதி ரீதியாக இம்முறையும் சூலூர் தொகுதி பொங்கலூர் பழனிசாமிக்கு கை கொடுக்காது என்றே கூறப்படுகிறது.
அதாவது சூலூரில் சொந்த காசில் சூனியம் வைக்கிறது திமுக என்பதுதான் அக்கட்சி தொண்டர்களின் புலம்பல்.












Click it and Unblock the Notifications