என்னை அடிமையாக நடத்தவே முடியாது... திமுகதான் உடையும்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
கோயம்புத்தூர்: என்னை யாரும் அடிமையாக நடத்தமுடியாது; அதிமுகவை உடைக்க நினைத்தால் திமுகதான் உடையும் என்று கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார்.
கோவையில் முகாமிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசியதாவது;

திமுக நாடகம்
மக்கள் கிராம சபை என்ற நாடகத்தை அரங்கேற்றி வருகிறது திமுக. கோவையில் நியாயமான கேள்வி கேட்ட பெண்ணுக்கு பதில் சொல்ல திராணி இல்லாமல் கட்சிக்காரர்கள் மூலம் அவரை வெளியேற்றி தாக்கி உள்ளார் ஸ்டாலின்.

அதிமுகவை உடைக்க முயற்சி
திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டம் ஆளும் அதிமுக அரசாங்கத்தை விமர்சிக்கத்தான் நடக்கிறது. ஜெயலலிதா மறைந்தபோது ஆட்சியையும் கலைக்க முயன்றார் ஸ்டாலின். அதிமுகவை உடைக்க முயன்றார் ஸ்டாலின். அதனை நாங்கள் முறியடித்துள்ளோம். அதிமுகவை உடைக்க நினைத்தால் திமுகதான் உடையும்.

ஊழல் குறித்து விவாதம்
தமிழகத்தில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான். பொதுவான இடத்தில் ஊழல் குறித்து விவாதம் செய்யலாம். எந்த துறையில் எவ்வளவு ஊழல் நடந்தது என்பதை துண்டு சீட்டும் இல்லாமல் ஸ்டாலின் சொல்ல வேண்டும். அப்படி சொல்ல முடியுமா?

விலைக்கு வாங்க முடியாது
அண்ணா கூறியதுபோல் பதவி என்பது தோளில் போட்டிருக்கின்ற துண்டு. என்னை யாரும் விலைக்கு வாங்கவோ, அடிமைப்படுத்தவோ முடியாது. மதம், ஜாதி என்ற பெயரில் யாரையும் பிரித்து பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம். ஹஜ் பயண நிதியை மத்திய அரசு ரத்து செய்த போதிலும் அதிமுக அரசு ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்குகிறது. முஸ்லிம்களின் உரிமையை தமிழக அரசு விட்டுத்தர அனுமதிக்காது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முன்னதாக தொழில் துறையினர் மற்றும் ஜமாத் நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications