25 ஆண்டுகளுக்கு பின் அதிமுக கோட்டையை தகர்த்த திமுக... கொடுத்த வேலையை கச்சிதமாக முடித்த Dr.மகேந்திரன்
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள திவான்சாபுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நடந்த இடைத்தேர்தலில் 25 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக கோட்டையை திமுக தன் வசமாக்கிக் கொண்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி தாலுகா ஆனைமலை வட்டாரத்தில் அமைந்துள்ளது திவான்சாபுதூர் ஊராட்சி. இந்த ஊராட்சி, வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இங்கு மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 4,415 பெண் வாக்காளர்கள் உள்பட 8.556 வேட்பாளர்கள் உள்ளனர். அதாவது 10 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள்தொகையை கொண்டது இந்த ஊராட்சி.

அதிமுக வேட்பாளர்
இங்கு கடந்த 25 ஆண்டுகளாக அதிமுகவை சேர்ந்த வேட்பாளரே வென்று ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் திவான்சாபுதூர் ஊராட்சிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

திமுக வேட்பாளர்
இந்த தேர்தலில் திமுக சார்பில் கலைவாணி சிலம்பரசன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுகவைச் சேரந்த சரோஜினி போட்டியிட்டார். இவர்கள் இருவரும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த டாக்டர் மகேந்திரனுக்கு திமு கழக தகவல் தொழில் நுட்ப பிரிவின் மாநில இணைச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.

சுற்றுப்புற பகுதிகள்
அத்துடன் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மக்கள் செல்வாக்கு பெற்ற மகேந்திரனுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சில அசைன்மென்ட்டை ஒப்படைத்தார். அதாவது வரும் உள்ளாட்சி தேர்தலில் இவரது செல்வாக்குக்குள்பட்ட தொகுதிகளில் வெற்றி வாகையை திமுகவுக்கு சொந்தமாக்க வேண்டும் என்பதுதான் அந்த பணி.

தேர்தல் பொறுப்பாளர்
அதை செய்து முடிக்க திமுக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட டாக்டர் மகேந்திரன், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மரு.வரதராஜன் உள்ளிட்டோர் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். இவர்கள் வீடு வீடாக சென்று கலைவாணிக்காக வாக்கு சேகரித்தனர். தேர்தல் தொடங்குவதற்கு முன்பே பிரச்சாரம் செய்வது குறித்தும் , தேர்தலில் வெற்றி வியூகம் குறித்து இரு டாக்டர்களும் கட்சியின் நிர்வாகிகளை அரவணைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
Recommended Video

திவான்சாபுதூர் ஊராட்சி மன்றத் தலைவர்
இதைத் தொடர்ந்து செயலில் இறங்கினர். தற்போது திவான்சாபுதூர் ஊராட்சி மன்றத் தலைவராக திமுக வேட்பாளர் கலைவாணி வெற்றி பெற்றுள்ளார். அதாவது கடந்த 25 ஆண்டுகளாக இந்த ஊராட்சியில் அதிமுகவே வென்று தனது கோட்டையாக வைத்திருந்த நிலையில் தற்போது அதை திமுக தகர்த்தெறிந்துவிட்டது.

திமுக சூளுரை
இந்த வெற்றி மூலம் இனி வரும் காலங்களில் கொங்கு மண்டலத்தில் நடக்க இருக்கும் எந்த தேர்தலாக இருந்தாலும் அதில் நிச்சயமாக திமுக கழகம் வெற்றி பெறும் என்று திமுகவினர் சூளுரைத்தனர். இந்த தேர்தலில் வென்ற திமுக ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி, சாலை வசதி, கழிப்பிட வசதி கழிவுநீர் கால்வாய்கள், தூய குடிநீர், வீட்டு மனை பட்டா உள்ளிட்டவற்றை செய்து தருவார் என மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்ததாக கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications