கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணையப் போகும் 20 ஊராட்சிகள்? எவை எவை தெரியுமா?
கோவை: கோவை மாநகராட்சியில் தற்போது 100 வார்டுகள் உள்ள நிலையில், மாநகரை சுற்றியுள்ள பல்வேறு ஊராட்சிகள் கோவையுடன் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது. அப்படி கோவை மாநகராட்சியுடன் இணைய வாய்ப்பு உள்ள 20 ஊராட்சிகள் எவை எவை என்பது பற்றி பார்ப்போம்.
கோயம்புத்தூர் என்ற கோவை மாநகரம் இன்றைக்கு தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ஊராக உள்ளது. வெறும் ஊர் மட்டுமல்ல... சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய தொழில் நகரமாக உள்ளது. தென்னிந்தியாவில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய தொழில் வளர்ச்சி உள்ள நகரமாக கோவை உள்ளது. அதுமட்டுமல்ல கோவை மாநகரம் வெறும் 20 வருடங்களில் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு வளர்ந்துள்ளது. கிராமங்களாக இருந்த கோவையின் புறநகர் பகுதிகள் பல இன்று கோவையின் முக்கியமான நகர்புறங்களாக உருவெடுத்து வருகிறது. தென்மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களும், பல்லாயிரம் வட இந்தியர்களுக்கும் வாழ்வு தரும் நகரமாக கோவை இருக்கிறது.

கோவை மாநகரம் என்பது முன்பு திருச்சி சாலையில் ஒண்டிபுதூர் வரையிலும், அவினாசி சாலையில் சின்னியம்பாளையம் வரையிலும், பொள்ளாச்சி சாலையில் குனியமுத்தூர் வரையிலும், பாலக்காடு சாலையில் கோவை புதூர் வரையிலும் தான் இருந்தது. இதேபோல் மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூர் வரையிலும், அன்னூர் சாலையில் சரவணப்பட்டி வரையிலும் கோவை மாநகரம் இருந்தது. இது 2011ம் ஆண்டு நிலவரப்படி இருந்த நிலவரம் ஆகும். ஆனால் இன்று கோவை மாநகரம் சுற்றியுள்ள எல்லா பகுதிகளிலும் 15 முதல் 25 கிமீ தூரம் வரை வளர்ந்துள்ளது.
கோவை மாநகரத்தின் எல்லை என்பது கடைசியாக 2011ம் ஆண்டில் விரிவுப்படுத்தப்பட்டது. அப்போது, 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் மற்றும் ஒரு கிராம ஊராட்சி ஆகியவை இணைக்கப்பட்டு, 152 சதுர கிமீ பரப்பிலிருந்த மாநகராட்சி, 254 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்பட்டது. சரியாக சொல்வது என்றால், குறிச்சி, குனியமுத்துார், கவுண்டம்பாளையம் நகராட்சிகள், வடவள்ளி, வீரகேரளம், துடியலுார், வெள்ளக்கிணறு, சரவணம்பட்டி, சின்ன வேடம்பட்டி, காளப்பட்டி பேரூராட்சிகள் மற்றும் விளாங்குறிச்சி ஊராட்சிப் பகுதிகள் கோவை மாநகரத்துடன் இணைக்கப்பட்டது.
தற்போது கோவை மாநகராட்சியில் 100 வார்டு பகுதிகள் உள்ளன. இந்த ஊர் நாளுக்கு நாள் விரிவாக்கம் அடைவதால் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புறநகர் பகுதிகளில் உள்ள உள்ளாட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்து வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது..
அதன்படி தற்போது கோவை மாநகராட்சியுடன் இணைக்க கோவையை ஒட்டியுள்ள உள்ளாட்சி பகுதிகளை இணைக்க அரசு ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில் கோவையின் புறநகர் பகுதிகளான வெள்ளமடை, அக்ரஹாரசாமக்குளம், கொண்டையம்பாளையம், சர்க்கார் சாமக்குளம், காளிபாளையம், வெள்ளானப்பட்டி, கீரணத்தம், குருடம்பாளையம், பன்னிமடை, நீலாம்பூர், இருகூர், மயிலம்பட்டி, பட்டணம், கலிக்கநாயக்கன்பாளையம், வேடபட்டி, சோமையம்பாளையம், தீத்திப்பாளையம், பேரூர் செட்டிபாளையம், மலுமிச்சம்பட்டி, சீரபாளையம் ஆகிய 20 உள்ளாட்சி பகுதிகளை இணைப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
கோவை மாநகரம் விரிவுப்படுத்தப்பட்டால் மட்டுமே மக்கள் தொகை அடிப்படையில் கிடைக்க வேண்டிய மெட்ரோ ரயில், சர்வதேச விமான நிலையம், பாதாள சாக்கடை பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் போன்றவை எல்லா பகுதிகளுக்கும் எளிதாக கிடைக்கும் என்பதால் இந்த இணைப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது..












Click it and Unblock the Notifications