கோவையை பதறவைக்கும் டவுசர் திருடர்கள்.. பூட்டிய வீடுகள் தான் குறி.. சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
கோவை: கோவை, பீளமேடு பகுதியில் பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்து பொருட்களை திருடிவிட்டு அரை நிர்வாணக் கோலத்தில் வெறும் டவுசர் மட்டும் அணிந்து கொண்டு வீட்டில் இருந்து திருடர்கள் வெளியேறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் கதிகலங்கிப் போயுள்ளனர். பூட்டி இருக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தீபாவளி பண்டிகைக்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு வெளியூர் சென்றிருக்கும் நபர்களின் வீடுகளைக் குறிவைத்து கொள்ளைச் சம்பவம் நடைபெறுகின்றது.

ஏற்கனவே அரை நிர்வாணக் கோலத்தில், கூர்மையான பெரிய பெரிய ஆயுதங்களுடன் திருடர்கள் பரபரப்பாக சாலைகளில் சுற்றும் காட்சி வெளியாகி ஒரு சில மாதங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அண்மையில் மருதமலை அருகே பூட்டிய வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் சம்பவம் அரங்கேறியிருந்தது.
இந்நிலையில், பீளமேடு பகுதியில் அரை நிர்வாணக் கோலத்தில் வெறும் டவுசர் மட்டும் அணிந்துகொண்டு பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்து பொருள்களை திருடிவிட்டு திருடர்கள் வெளியேறிச் செல்லும் சிசிடிவி கட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, பீளமேடு அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த ராம். இவர் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஆனந்தராம் தனது மனைவி சுவாதியுடன் தீபாவளி பண்டிகைக்காக பெங்களூருக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று அவர்கள் கோவைக்குத் திரும்ப திட்டமிட்டிருந்துள்ளனர்.
இந்நிலையில், அதிகாலையில் ஆனந்தராமின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் வந்து சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. பெங்களூரில் இருந்தபடி வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை அவர்கள் இன்று காலை பார்த்துள்ளனர். அந்த காட்சியில், அதிகாலையில் ஐந்து மர்ம நபர்கள் வீட்டின் காம்பவுண்ட் கேட்டை ஏறி குதித்து உள்ளே சென்று பொருட்களை கையில் எடுத்துச் செல்வது தெரியவந்தது. உடனே அவர்கள் இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் ஆனந்த ராம் வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்த 35 பவுன் நகைகள் மற்றும் ஐந்து கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை திருடு போயிருப்பதாக போன் மூலம் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனந்தராம் பெங்களூருவில் இருந்து கோவைக்கு வந்தால்தான் எவ்வளவு பொருள்கள் காணாமல் போயுள்ளது என்பது குறித்த சரியான தகவல் தெரியவரும்.
வீட்டில் பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் ஐந்து பேரும் டவுடர் மட்டும் அணிந்து கொண்டும், முகத்தை துணியால் மறைத்துக் கொண்டும் வீட்டுக்குள் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், அந்த மர்ம நபர்கள் லட்சுமி நகர் பகுதியில் சாலையில் ஓரமாக நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளும் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சியை வைத்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications