துபாய் - கோழிக்கோடு விமானம்.. கோவையில் அவசரமாக தரையிறக்கம்.. மோசமான வானிலையால் மாற்றம்
கோவை: துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி இன்று (அக்டோபர் 12) காலை சென்று கொண்டிருந்த 'ஃப்ளை துபாய்' விமானம், மோசமான வானிலை காரணமாககோவை விமான நிலையத்தில் தரையிறங்கியது. வானிலை சரியான பின்னர் மீண்டும் கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி விமானம் புறப்பட்டு செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானங்களை பொறுத்தவரை தரையிறங்க போகும் இடத்தில் மோசமான வானிலை ஏற்பட்டால், அதற்கு பதில் வேறு இடத்தில் இறங்குவது வழக்கம். ஏனெனில் அடர்ந்த மேகமூட்டம் மற்றும் மேகமூட்டத்துடன் மிக கடுமையான மழை போன்ற காலக்கட்டங்களில் விமானங்கள் வேறு இடங்களில் தரையிறங்குவது வழக்கம்.

சர்வதேச விமானங்கள் பெங்களூர் வரும் போது, மோசமான வானிலை காரணமாக சென்னைக்கு பலமுறை திருப்பிவிடப்பட்டுள்ளன. இதேபோல்சென்னை வந்த சர்வதேச விமானங்கள் பல, பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. வானிலை சரியான பின்னர் விமானங்கள் மீண்டும் வழக்கமான இடத்திற்கு புறப்பட்டு செல்லும். அந்த வகையில் தான் இன்று நடந்துள்ளது.
துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி இன்று (அக்டோபர் 12) காலை சென்று கொண்டிருந்த 'ஃப்ளை துபாய்' நிறுவனத்தை சேர்ந்த விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணித்து கொண்டிருந்தனர். ஆனால் தரையிறக்க விமானம் முயற்சித்த போது, கோழிக்கோடு விமான நிலையத்தில் மோசமான வானிலை நிலவி வந்தது.
இந்த காரணத்தால் அரை மணி நேரத்துக்கு மேல் வானில் வட்டமிட்ட கோழிக்கோடு விமானம் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு கட்டத்தில் திருப்பி விடப்பட்டது. இதையடுத்து இன்று காலை 7. 45 மணியளவில் கோவையில் கோழிக்கோடு விமானம் தரையிறங்கியது. வானிலை சீரான தகவல் கிடைத்தபின் மீண்டும் விமானம் கோழிக்கோடு புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5.40 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (எண்: ix613), இரண்டு விமானிகள், ஆறு பணி பெண்கள் மற்றும் 141 பயணிகளுடன் சார்ஜாவுக்கு புறப்பட்டுசென்று கொண்டிருந்தது. 186 இருக்கைகள் கொண்ட போயிங் 737-800 ரக விமானம் திருச்சி ஏர்போர்டில் உள்ள ரன்வேயில் இருந்து மேல் எழும்பிய நிலையில், அதன் சக்கரங்கள் உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இந்த விமானத்தில் சக்கரங்கள் உள்ளிழுக்கவில்லை. உடனடியாக இதை கவனித்த விமானிகள், திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
சக்கரங்களை உள்ளிழுக்கும் ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் இந்த பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை தொடர்ந்து இயக்க விரும்பாத விமானிகள், திருச்சி விமான நிலையத்தை சுற்றி வட்டமிட்டனர். அதன்படி, மாலை 5.45 மணி முதல் இரவு 8.10 மணி வரை, விமானம் திருச்சி வான் எல்லைப்பகுதிகளில் வட்டமிட்டது. இந்த பிரச்சனையை சரிசெய்ய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொழில்நுட்ப வல்லுனர்களும், விமானிகளும் முயற்சித்தனர். ஆனால் பலமுறை முயன்றும் சரி செய்ய முயன்றும் முடியவில்லை.
இறுதியாக சக்கரம் விமானத்துக்கு வெளியே நீட்டிக் கொண்டிருப்பதால், விமானத்தை தரையிறங்குவதில் சிக்கல் இருக்காது என்று விமானிகள் திட்டமிட்டார்கள். அதேநேரம் ரன்வேயில் இறங்கும் போது அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில், விமானத்தில் உள்ள பெட்ரோலை குறைக்க, புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளிலும், திருச்சி மாவட்ட பகுதிகளையும் 15-க்கும் மேற்பட்ட முறை விமானம் சுற்றி வந்தது. இறுதியாக இரவு, 8.10 மணி அளவில் விமானம் பத்திரமாக தரையிறஙங்கியது.












Click it and Unblock the Notifications