கோவை வடவள்ளியில் வேலுமணியின் உறவினர் வீட்டில் வரவு செலவு கணக்கு புத்தகம் பறிமுதல்
கோவை: கோவை வடவள்ளியில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் உறவினர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.
Recommended Video
கோவை குனியமுத்தூரில் உள்ள அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான 53 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். கோவையில் 35 இடங்களிலும் சென்னையில் 16 இடங்களிலும் காஞ்சிபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் சென்னை எம்எல்ஏ விடுதியில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் மாநகராட்சி பணிகளுக்காக போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் கோடிக்கணக்கில் மோசடி செய்து ஊழல் செய்ததாகவும் இவர் மீது கடந்த மாதம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்கள் அளிக்கப்பட்டன.
அந்த புகாரின் பேரில் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வேலுமணியின் உறவினரும் கோவை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் அணி நிர்வாகியுமான சந்திரசேகரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது வடவள்ளியில் உள்ள அவரது வீட்டிலிருந்து வரவு, செலவு புத்தகம் உள்பட ஆவணங்கள் சிக்கின. இவற்றை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இது போல் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. கோடம்பாக்கத்தில் வேலுமணியின் நண்பர் வீட்டிலும் கோவை மதுக்கரையில் பேரூராட்சி முன்னாள் தலைவர் சண்முகராஜா வீட்டிலும் வேளச்சேரியில் விஜயநகரில் வேலுமணிக்கு சொந்தமான இடத்திலும் ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
எஸ்பி வேலுமணி, அவரது உறவினர்கள், அவரது பங்குதாரர்கள் உள்பட 17 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை திட்டப்பணிகளில் முறைகேடு செய்துள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி திட்ட பணிகளில் ரூ 346 கோடி ஊழல் நடந்ததாகவும் சென்னை மாநகராட்சி திட்டபணிகளில் ரூ 464 கோடி ஊழல் நடந்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ் பி வேலுமணியின் வீட்டில் அதிமுகவினர் குவிந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications