வீக் என்ட் வால்பாறை போறீங்களா? இன்று முதல் இபாஸ் கட்டாயம்! ஆழியார் செக்போஸ்ட்டீல் சோதனை
கோவை: பிரபல சுற்றுலாத் தலமான வால்பாறையில் வாகனங்களுக்கான இபாஸ் நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆழியார் வனத் துறை சோதனை சாவடியில் தீவிர சோதனை நடைபெறுகிறது. இபாஸ் இருந்தால் மட்டுமே வால்பாறையில் அனுமதி அளிக்கப்படும்.
ஊட்டி, கொடைக்கானலை போல் கோவை மாவட்டம் வால்பாறைக்குச் செல்ல இன்று முதல் இ பாஸ் நடைமுறைப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஆழியாறு வனத்துறை சோதனைச் சாவடி அருகே வால்பாறை செல்லக் கூடிய சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஸ்கேன் செய்து இலவசமாக இ பாஸ் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சார் ஆட்சியர் ஆழியார் வனத்துறை சோதனை சாவடியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கூறுகையில், வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக இ பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இது போல் ஆழியார் அருகே உள்ள நவமலை, கவியருவி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் நபர்களுக்கும் கண்டிப்பாக இ பாஸ் எடுத்தால் மட்டுமே அனுமதி. வால்பாறையை சேர்ந்த உள்ளூர் மக்கள் ஒரு முறை இபாஸ் எடுத்தால் போதும் என அறிவித்துள்ளார்.
வனம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வின் உத்தரவின்படி ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வருகிறது.
இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் கோவை மாவட்டம் வால்பாறைக்கு படையெடுத்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து ஊட்டி, கொடைக்கானல் போல வால்பாறையிலும் நவம்பர் 1 ம் தேதி முதல் இபாஸ் நடைமுறையை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நடைமுறையை அமல்படுத்தியது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி விசாரணையை நவம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications