வால்பாறை சுற்றுலாப் பயணிகளுக்கு இபாஸ் கட்டாயம்.. நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறை
கோவை: உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஊட்டி, கொடைக்கானல் போல வால்பாறை மலைப்பகுதிக்கும் இ பாஸ் முறை அமல்படுத்தப்படவுள்ளது. வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களுக்கு இ பாஸ் பெற வேண்டும் என்று கோவை மாவடிட ஆட்சியர் அறிவித்துள்ளார். அவரின் அறிவிப்பில் இதுகுறித்து மேலும் சில முக்கிய தகவல்களை கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் வால்பாறை மலைப் பகுதிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். ஏற்கனவே ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு செல்ல தமிழ்நாடு அரசிடம் இ பாஸ் பெறுவது கட்டாயம் என்ற நடைமுறை அமலில் உள்ளது.

வால்பாறைக்கு இ பாஸ்
இதேபோல வால்பாறைக்கும் இ பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மாவட்டம், வால்பாறைக்கு வருகிற சுற்றுலா பயணிகளுக்கு வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் (1.11.2025) இபாஸ் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.
அதன்படி நவம்பர் 1 ஆம் தேதி முதல் வால்பாறைக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும், தங்களின் வாகனங்களுக்கு இ பாஸ் பெற வேண்டும். வால்பாறைக்கு செல்ல இ பாஸ் பெற https;//www.tnepass.tn.gov.in/home என்கிற இணையதளத்தின் வாயிலாக மக்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் சுற்றுலா பயணிகள் எளிதில் இ பாஸ் பெறுவதற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பிளாஸ்டிக்கு தடை
மக்கள் சிரமம் இல்லாமல் இ பாஸ் பெறுவதற்காக, கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆழியார் சோதனை சாவடியிலும், கேரளாவில் இருந்து கோவை வரும்போது, சோலையார் இணை இடதுகரை (மழுக்குப்பாறை வழி) சோதனை சாவடியிலும் நேரடியாக பதிவு செய்து இ பாஸ் பெற்றுக் கொள்ளலாம். அதேநேரத்தில் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை.
வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள், இ பாஸ் பெற்று வருவதை கண்காணிப்பதற்காக வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, வனத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் இணைந்த குழுவினர் மேற்சொன்ன ஆழியார் மற்றும் சோலையார் ஆகிய இரண்டு சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
உள்ளூர் மக்களுக்கு
வால்பாறை தாலுகாவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பதிவு முகவரி கொண்ட சொந்த பயன்பாட்டு வாகனங்களான இரு சக்கரம், நான்கு சக்கரம், சுற்றுலா வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் https;//www.tnepass.tn.gov.in/home என்கிற இணையதளம் சென்று உள்ளுர் இ பாஸ் (Localite Pass) என்ற இணைப்பில் ஒருமுறை மட்டும் பதிவு செய்தால் போதுமானது.
எனவே கோவை மாவட்டம், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களுக்கு நவம்பர் 1 ஆம் தேதி முதல் இ பாஸ் பெற்று பயணிக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications