செங்கோட்டையனுக்கு செக்.. கோவையில் கணக்கை தொடங்கும் எடப்பாடி.. கொங்கு நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு
கோவை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரபரப்புகள் இப்போதே தொடங்கிவிட்டன. அதிமுக கட்சியில் உள்கட்சி பிரச்சனை பூதாகரமாகியுள்ளது. பிரிந்தவர்களை ஒன்றிணைக்க செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துள்ளார். செங்கோட்டையடன் பதவியை பறித்து எடப்பாடி பதிலடி கொடுத்த நிலையில், நேற்று செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்துள்ளார். நெருக்கடிகளுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி இன்று கொங்கு மண்டலத்தில் பிரச்சாரம் தொடங்குகிறார். அடுத்த 2 வாரம் அவர் கொங்கு மண்டலத்தில் தான் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதையடுத்து செங்கோட்டையனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வரவேற்பு பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என கொங்கு மண்டல நிர்வாகிகளுக்கு எடப்பாடி உத்தரவிட்டுள்ளாராம்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் இப்போதிருந்தே சூடுபிடித்து வருகிறது. திமுக தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி, அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று இந்த தேர்தலில் 4 முனை போட்டி ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுகவும், திமுகவிடம் இருந்து ஆட்சியை பறிக்க அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன. மறுபக்கம் இரண்டு கழகங்களுக்கும் கடுமையான போட்டி கொடுத்து, தங்களின் இருப்பை நிரூபிக்க நாம் தமிழர், தவெக முயற்சித்து வருகின்றன. நாம் தமிழர் தனித்து போட்டி என கூறிவிட்டது. தவெக தங்கள் தலைமையில் வலிமையான கூட்டணி உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளது.

செங்கோட்டையன் Vs எடப்பாடி பழனிசாமி
இதில் அதிமுக நிலைமை தான் சற்று மோசமாக உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியின் ஒற்றை தலைமையாக பிரகடனப்படுத்தி வருகிறார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அந்தக் கட்சி தோல்வியடைந்துள்ளது. ஓ. பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி தினகரன் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து பிரிந்துவிட்டனர். 2026 தேர்தலில் அதிமுக வலிமையாக இருக்க பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியில் வலுத்து வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி இடையே சமீபகாலமாக பனிப்போர் நிலவி வருகிறது. இதனிடையே, பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடிக்கு, செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்திருந்தார். இது அந்த கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
2 வாரம் கொங்கு மண்டலம்
தன்னுடைய சொந்த பகுதியான கொங்கு மண்டலத்தில் இருந்தே, சீனியர் செங்கோட்டையன் மூலம் எதிர்ப்பு கிளம்பியது எடப்பாடிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதையடுத்து செங்கோட்டையன் மற்றும் அவரின் ஆதரவாளர்களின் பதவியை பறித்து எடப்பாடி அதிரடி காட்டினார். மறுபக்கம் செங்கோட்டையன் டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்துள்ளார். செங்கோட்டையனின் அடுத்தடுத்த நகர்வுகள் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். செங்கோட்டையன் கருத்துக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்ட வலதுசாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி 'தமிழகத்தை காப்போம்.. மக்களை மீட்போம்..' என்கிற பெயரில் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவரின் நான்காம் கட்ட பிரச்சாரம் இன்று கோவை மாவட்டத்தில் தொடங்குகிறது. அடுத்த 2 வாரங்களுக்கு எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தில் தான் பிரச்சாரம் செய்கிறார். இன்று கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். நாளை பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைபேட்டை தொகுதிகளில் எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார். தொடர்ந்து அவர் திருப்பூர், கோவை மாவட்டங்களில் பயணம் மேற்கொள்கிறார். 13 ஆம் தேதி வரை அவர் தொடர் பரப்புரையில் ஈடுபடவுள்ளார். அதன் பிறகு 3 நாட்கள் எடப்பாடி ஓய்வு எடுக்கவுள்ளார்.
பூத் வாரியாக டார்கெட்
இதையடுத்து 17 ஆம் தேதி முதல் அவர் மீண்டும் பிரச்சாரம் தொடங்குகிறார். நீலகிரி, நாமக்கல், கரூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். 26 ஆம் தேதி வரை அவர் கொங்கு மண்டலத்தில் தான் பயணம் செய்கிறார். செங்கோட்டையன் நகர்வுகளால் எந்த தாக்கமும் இல்லை, மக்களின் ஏகோபித்த ஆதரவு எடப்பாடிக்கு இருக்கிறது என்று உணர்த்தும் வகையில் வரவேற்பு ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக செய்ய கொங்கு மண்டல நிர்வாகிகளுக்கு எடப்பாடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கியமாக இன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியில் வைத்துதான் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் தொடங்குகிறார். தன்னுடைய பவரை காட்டுவதற்காக வேலுமணியும் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. தொண்டாமுத்தூர் தொகுதியில் சுமார் 300 பூத்கள் உள்ளன. சராசரியாக ஒரு பூத்துக்கு 200 பேர் வீதம் சுமார் 20,000 பேரை திரட்ட முடிவு செய்துள்ளனர். ரோடு ஷோ, பிரச்சாரம் என்று ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தது 10,000 பேரை திரட்ட டார்கெட் விதிக்கப்பட்டுள்ளது. 26ஆம் தேதி வரை இதே திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications