தேர்தல் அதிகாரிகளின் கடமை உணர்ச்சி.. ஏடிஎம்களில் நிரப்ப எடுத்து சென்ற பணம் ரூ.3.80 கோடியை பிடித்தனர்
கோவை: உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 3 கோடியே 80 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தலை ஒட்டி பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய அனுமதியின்றியும், ஆவணங்கள் இன்றியும் செல்லப்படும் பொருட்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஜிஎஸ்டி ஆய்வாளர் மலர்விழி தலைமையில் கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சூலூர் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தை சோதனையிட்டதில் இரண்டு தனியார் வங்கி ஏ.டி.எம்மிற்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 3 கோடியே 80 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பணம் ஏற்றிச் சென்ற வாகனத்தை கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் இந்த பணம் கோவையில் இருந்து பல்லடத்தில் உள்ள இரண்டு ஏடிஎம்களுக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது தொடர்ந்து தனியார் நிறுவன ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கி ஏடிஎம்களுக்கு பணம் நிரப்பும் போர்வையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்துவிட கூடாது என்பதில் எச்சரிக்கையாக உள்ள தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளுக்கு சபாஷ் சொல்லலாம்.