மதுக்கரை அருகே தண்டவாளத்தை கடந்த மக்னா யானை.. சட்டென வந்த ரயில்.. அடுத்த நொடி பதைபதைப்பு சம்பவம்
கோவையில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மக்னா யானை நூலிழையில் உயிர் தப்பியது.
கோவை: கோவையில் ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மக்னா யானை நூலிழையில் தப்பிய காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைக்கிறது.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து மக்னா எனும் ஒற்றை காட்டு யானை வனப்பகுதிக்கு செல்லாமல் அட்டகாசம் செய்து வருகிறது.
விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வந்தது. தொடர்ந்து யானையை வனத்துறையினர் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். ஆனாலும் மீண்டும் மீண்டும் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி கொண்டிருந்தது.

மக்னா யானை
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 5ஆம் தேதி அந்த மக்னா யானையை கும்கி யானையின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. இதையடுத்து 6ஆம்தேதி கோவை- பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வனச்சரகத்துக்குள்பட்ட வரகழியாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

10 நாட்கள்
கடந்த 10 நாட்களாக வனப்பகுதிக்குள் சுற்றி வந்த மக்னா சேத்துமடை பகுதிக்கு சென்றது. அங்குள்ள கிராம பகுதிக்குள் நுழைந்தது. மக்னா தொடர்ந்து ஒரு இடத்தில் இல்லாமல் பாதையை மாற்றிக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் பொள்ளாட்சியில் இருந்து பாலக்காடு சாலையை கடந்த யானை கடந்த 25 ஆம் தேதி காலை மதுக்கரை வனப்பகுதிக்கு வந்தது. தென்னை தோப்பு, ஓடை மற்றும் விவசாய பயிர்கள் வழியாக சென்ற மக்னா யானையை பத்திரமாக பிடிக்க தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

மதுக்கரை
இந்த நிலையில்தான் அந்த மக்னா யானை மதுக்கரை அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் ஏறி கடக்க முயன்றது. அப்போது கேரளா செல்லக் கூடிய எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இதை கண்ட வனத்துறையினர் யானை மீது ரயில் மோதாமல் இருக்க சப்தம் எழுப்பியும் பட்டாசுகளை வெடித்தும் விரட்டுவதற்கு முயற்சித்தனர்.

அதிர்ஷ்டவசம்
அப்படியும் நகராமல் அது பாட்டுக்கு டிராக்கில் சென்று கொண்டிருந்தது. யானைக்கு எதுவும் நிகழக் கூடாதே என வனத்துறையினர் பதற்றத்தில் இருந்தனர். ஆனால் ரயில் யானை அருகே வருவதற்கு நொடி பொழுதின் போது டிராக்கைவிட்டு கடந்து சென்றது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் யானை ரயிலில் மோதி அடிப்படாமல் இருக்க போராடிய வனத்துறையினருக்கு பாராட்டுகள் குவிகின்றன.












Click it and Unblock the Notifications