கோவை சிங்கநல்லூரில் காலையிலேயே அதிரடி.. பொக்லைனுடன் வந்த அதிகாரிகள்.. சூப்பர் மாற்றம்
கோவை: கோவை சிங்காநல்லூர் என்பது தென் மாவட்டங்களுக்கான பேருந்துகள் செல்லும் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியாகும். அதுமட்டுமின்றி, திருச்சி சாலை, அவினாசி சாலையை இணைக்கும் பகுதியாகவும் உள்ளது. இங்கு எப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.. இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக 250 கடைகளின் முன் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் நேற்று அதிரடியாக அகற்றினார்கள்.
கோவையில் சிங்கநல்லூரை பொறுத்தவரை மிகவும் முக்கியமான பகுதியாகும். ஒரு பாதி தமிழ்நாட்டு மக்கள் சிங்காநல்லூர் வந்து தான் கோவைக்கு வருவார்கள். சிங்கநல்லூரில் இருந்து ஒண்டிப்புதூர் நோக்கி செல்லும் திருச்சி சாலை, உக்கடம் நோக்கி செல்லும் சாலை, பீளமேடு நோக்கி செல்லும் சாலை 3 பக்கமும் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக புகார்கள் எழுந்து வந்தது.

குறிப்பாக கோவை -திருச்சி ரோட்டில் ஒண்டிப்புதூர் பாலம் முதல் அல்வேர்னியா தனியார் பள்ளி வரையிலும், காமராஜர் சாலை முதல் மனீஷ் தியேட்டர் வரையிலும் சாலையின் இருபுறமும் உள்ள கடைகள் சாலைகளை ஆக்கிமிப்பு செய்துள்ளதாகவும், அதனை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. இதனிடையே பல கடைகள் நிழற்கூடாரம் மற்றும் நடைபாதையில் பெட்டிகள், பெயர் பலகை வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததை கண்ட அதிகாரிகள், நடைபாதையில் மக்கள் நடந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டதை உணர்ந்தனர்.
மேலும் நடைபாதைக்கு பதில் மக்கள் சாலையில் நடந்து செல்வதால் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. மேலும் திருச்சி ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து மக்களின் கோரிக்கையை ஏற்று கடைகளின் முன்புறம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து திருச்சி சாலையில் கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர் முத்துசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி உதவி பொறியாளர் கணேசன், இளநிலை பொறியாளர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்றார்கள். 3 பொக்லைன் எந்திரங்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடைகள் முன்பு இருந்த பந்தல்கள், செட்டுகள், போர்டுகள், பிளக்ஸ் பேனர்கள் ஆகியவற்றை அகற்றினார்கள்.
மேலும் திருச்சி ரோட்டில் சுமார் 6 கிலோமீட்டர் தூரம் வரையிலும் ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரிகள், வணிக வளாகங்கள் உள்பட 250 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் இடித்து தளளினார்கள். திருச்சி ரோட்டில் சிங்காநல்லூர் உழவர் சந்தையில் இருந்து மேம்பாலம் அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட உள்ளது. இந்த சூழலில் தான் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை அதிகாரிகள் நேற்று மேற்கொண்டனர். ஆக்கிரிமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.












Click it and Unblock the Notifications