எ.வ.வேலு vs எஸ்.பி. வேலுமணி - வெடிக்கும் கோவை உக்கடம் மேம்பாலப் பிரச்னை
கோவை: கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே ரூ. 481 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடந்த வாரம் திறந்து வைத்தார். ஒருபக்கம் பாலம் திறந்த அன்றைய தினமே அந்த மேம்பாலம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தள்ளாடிக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் அந்த பாலத்தை வைத்து அரசியலிலும் மோதல்கள் வெடிக்க தொடங்கியுள்ளன. "உக்கடம் மேம்பாலம் திட்டம் அதிமுகவால் கொண்டு வரப்பட்டது, தற்போது திமுக அதற்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறது." என அதிமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்த அடுத்த நாளே அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, உக்கடம் மேம்பாலத்தை காரில் பயணித்தபடி பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வேலுமணி, "கோவை மாவட்ட மக்களின் 25 ஆண்டு கால கனவு திட்டமான உக்கடம் - ஆத்துப்பாலம் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு, கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியால் ரூ.216 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இந்த மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த மேம்பால பணிகளை ஓராண்டில் முடித்திருக்கலாம் ஆனால் மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டும் பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளன. கோவை மாவட்டத்துக்கு திமுக எந்த ஒரு புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மட்டுமே திறந்து வைக்கின்றனர்." என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை, உயர்மட்டப்பாலம் அமைக்கும் திட்டத்துக்கு, கடந்த 2010 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் கருத்துரு உருவாக்கப்பட்டது. பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலை மற்றும் உக்கடம், ஒப்பணக்கார வீதி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்ததாலும், பாலம் கட்டுவதற்கு கருணாநிதி ஆட்சியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
14.11.2011 தேதி கோவை மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் அங்கு உயர்மட்டப்பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முந்தைய அதிமுக ஆட்சியில் இத்திட்டத்தை செயல்படுத்த மனம் இல்லாமல், ஏழு ஆண்டுகள் காலதாமதத்திற்குப் பின் 2.4.2018 அன்றுதான் பாலம் பணி தொடங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. கோவை மாவட்டத்தில் மிகப்பெரிய அதிகார மையமாக செயல்பட்டு வந்த வேலுமணி 7 ஆண்டு காலம் கோவை மக்கள் மீது எவ்வித அக்கரையும் காட்டவில்லை. 7.5.2021 அன்று, திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றபோது 12% பாலப்பணிகள் மட்டுமே முடிந்திருந்தன. இந்த பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் என்னிடம் அறிவுறுத்தினார்.
அதன்படி நான் பலமுறை கோவைக்கு சென்று ஆய்வு கூட்டங்கள் நடத்தி, பொறியாளர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கி பணிகளை விரைவாக முடித்துள்ளோம். என்னுடைய தொடர் நடவடிக்கை காரணமாக 88% பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த மேம்பாலப்பணிக்கு சுமார் ரூ.318 கோடி நிதி திராவிட மாடல் ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த சாலைகளை பயன்படுத்தக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், காலவிரயத்தைத் தவிர்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலமைச்சரால் இந்தப் பாலம் கடந்த 9ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக எங்களுக்கு கிடைத்த பாராட்டினை பொறுத்துக் கொள்ள முடியாமல் வேலுமணி உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுகிறார். காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்" என்ற முது மொழிக்கேற்ப எங்கள் ஆட்சியின் பணிகளை பாராட்ட மனமில்லை என்றாலும், குறை சொல்லாமல் இருந்திருக்கலாம். தற்போது, நடைபெற்று வரும் சுங்கம் பகுதியில், ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் பணி 31.8.2024 தேதிக்குள் முடிக்கப்படும்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications