நாடு முழுவதும் 'காஷ்மீர்' என்ற பெயரில் தெரு இருக்க வேண்டும்.. ஜக்கி வாசுதேவ் கோரிக்கை
காஷ்மீரின் பூர்வக்குடிகளே காஷ்மீர் பண்டிட்டுகள்தான். அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிகள் மற்றும் அவலங்களை நம் நாட்டில் வாழும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
கோவை: இந்தியா முழுவதும் ஒவ்வொரு நகரத்திலும் 'காஷ்மீர்' என்ற பெயருடன் கூடிய தெரு அல்லது சதுக்கம் இருக்க வேண்டும் என்று ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.
உலக காஷ்மீரி பண்டிட் புலம்பெயர்ந்தோர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், காஷ்மீர் பண்டிட்டுகளின் வலியை ஒவ்வொரு இந்தியரும் உணரும் வகையிலான முயற்சிகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அகதிகளாக மாறிய பண்டிட்டுகள்
ஜம்மு - காஷ்மீரில் கடந்த 1990-களின் பிற்பகுதியில் தீவிரவாத இயக்கங்கள் பெருகத் தொடங்கின. காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்க வலியுறுத்தி பல நாசவேலைகளில் ஈடுபட்டனர். அப்போது இந்திய அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்த காஷ்மீர் பண்டிட்டுகள் மீது தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதலை நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டனர். இதனால் உயிருக்கு அஞ்சி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அவர்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.

மீண்டும் தீவிரவாதிகள் அராஜகம்
இதனிடையே, மத்தியில் பாஜக அரசு அமைந்தது முதலாக, பண்டிட்டுகளை காஷ்மீரில் மீள்குடியேற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்பேரில், பல மாநிலங்களில் இருந்த பண்டிட்டுகள் மீண்டும் காஷ்மீரில் குடிபெயர்ந்தனர். ஆனால், தற்போது தீவிரவாதிகள் மறுபடியும் காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் பல பண்டிக் சமூகத்தினர் உயிரிழந்து வருகிறார்கள்.

"தெருக்களுக்கு காஷ்மீர் பெயர்"
இந்நிலையில், 'உலக காஷ்மீரி பண்டிட் புலம்பெயர்ந்தோர் கூட்டமைப்பு' (Global Kashmiri Pandit Diaspora) சார்பிலான மாநாடு அண்மையில் நடைபெற்றது. இதில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பங்கேற்று பேசியதாவது: காஷ்மீரின் பூர்வக்குடிகளே காஷ்மீர் பண்டிட்டுகள்தான். அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிகள் மற்றும் அவலங்களை நம் நாட்டில் வாழும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதற்காக, இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் காஷ்மீர் என்ற பெயருடன் கூடிய உள்ள தெருக்கள் அல்லது சதுக்கத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக நீங்கள் (காஷ்மீர் பண்டிட்டுகள்) மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும்.

"குறும்படம் எடுங்கள்"
நாட்டில் உள்ள அனைவருக்கும் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அவலம் குறித்து தெரிய வேண்டும். இதற்காக, காஷ்மீர் பண்டிட்டுகளாகிய நீங்கள் தனி நபராகவும், குடும்பமாகவும் உங்களுக்கு ஏற்பட்ட வலிகளை 10 முதல் 20 நிமிட குறும்படங்களாக தயாரித்து வெளியிட வேண்டும். இந்தக் குறும்படங்களை திரையரங்குகளில் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. நமது செல்போன்களும், கம்ப்யூட்டர்களுமே போதுமானது. இவ்வாறு சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினார்.












Click it and Unblock the Notifications