கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு முட்டி மோதும் 6 பேர்! ரேஸில் முந்துவது யார்? தலைமை ‘டிக்’ யாருக்கு?
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறுகிறது. மேயர் பதவியை பிடிக்க திமுகவின் 6 கவுன்சிலர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருவதாகத் தெரிகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 96 வார்டுகளை கைப்பற்றின. அப்போது கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி 19 வது வார்டு உறுப்பினர் கல்பனா ஆனந்தகுமாரை மேயராக பரிந்துரை செய்தார்.

அதன்படி திமுக தலைமை, எளிய பின்னணியைக் கொண்ட கல்பனா ஆனந்தகுமாரை மேயர் வேட்பாளராக அறிவித்தது. கல்பனா ஆனந்தகுமார் கோவை மாநகராட்சியின் மேயராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
கல்பனா ராஜினாமா: கோவை மேயர் கல்பனா, திமுக மாமன்ற உறுப்பினர்களிடையே மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார். மேலும், மாநகராட்சியில் விடப்படும் டெண்டர்கள் தொடர்பாக கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டல தலைவர்களுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்ததால் அவர் மீது திமுக தலைமைக்கு அடுத்தடுத்து புகார்கள் சென்றன.
இதன் காரணமாக அவரை மாற்ற திமுக தலைமை முடிவு செய்தது. பதவியைக் காப்பாற்றிக் கொள்ள சென்னையில் முகாமிட்டு காய்நகர்த்தி வந்தது கல்பனா தரப்பு. ஆனாலும், தலைமை உறுதியாக இருந்ததைத் தொடர்ந்து, தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார் கல்பனா.
மேயர் மறைமுக தேர்தல்: இந்நிலையில், கோவை மாநகராட்சியில் அடுத்த மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலையே வேட்பு மனுக்கள் பரிசீலனை நடத்தப்பட்டு மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதற்கு முன்பாக, திமுக தலைமை சார்பில் அதிகாரப்பூர்வ மேயர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
கோயம்புத்தூர் மாநகராட்சியின் அடுத்த மேயராக வரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 6 பெண் கவுன்சிலர்கள் மத்தியில் மேயர் பதவியை பெற கடும் போட்டி நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேயர் ரேஸில் 6 பேர்: மேயர் பதவிக்கு தற்போது மத்திய மண்டல தலைவராக உள்ள 46வது வார்டு கவுன்சிலர் மீனா லோகு, கிழக்கு மண்டல தலைவராக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக்கின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி, மேற்கு மண்டல தலைவராக உள்ள தெய்வானை தமிழ்மறை ஆகியோர் காய்நகர்த்தி வருவதாகத் தெரிகிறது.
மேலும், 34வது வார்டு கவுன்சிலர் மாலதி, கனிமொழி எம்.பி மூலமாக மேயர் பதவிக்கு காய்நகர்த்துவதாக கூறப்படுகிறது. மேலும், 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி, கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரான தனபாலின் மனைவியும், கோவை மாநகராட்சி 27 ஆவது வார்டு கவுன்சிலருமான அம்பிகா தனபால் ஆகியோரும் மேயர் பதவிக்கு குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
யார் கை ஓங்கும்?: 2022ல் திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக்கின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி, கோவை புறநகர் கிழக்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் நிவேதிதா, 46வது வார்டு கவுன்சிலர் மீனா லோகு ஆகியோர் மேயர் பதவிக்கான ரேஸில் இருந்தனர்.
அவர்களில் இலக்குமி இளஞ்செல்வி, மீனா லோகு ஆகியோர் இப்போதும் மேயர் பதவியை பெற முயல்கின்றனர். மேலும், 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி, கோவை எம்.பி கணபதி ராஜ்குமாரின் ஆதரவாளர் என்பதால் அவர் கையும் ஓங்குவதாக கூறப்படுகிறது. மேலும், 63வது வார்டு கவுன்சிலர் சாந்தி முருகனும் ரேஸில் உள்ளார்.
27வது வார்டு கவுன்சிலர் அம்பிகாவின் கணவர் தனபால் இளைஞரணி பொறுப்பில் இருப்பதால், உதயநிதி மூலமாக முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. மாவட்ட தலைமை சார்பில் இன்னும் தலைமைக்கு யார் பெயரையும் பரிந்துரைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மாவட்ட தலைமை பரிந்துரைத்த பின்னர், திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசித்து மேயர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். கோவை மேயர் தேர்வில் அமைச்சர் கே.என்.நேருவின் கையும் ஓங்கி இருக்கும் எனத் தெரிகிறது. திமுக தலைமை 'டிக்' அடிக்கப்போகும் பெயர் யாருடையது என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications