"பிரியாணிக்கு கொசுரா 'ஒயிட் ரைஸ்' தாங்க".. ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதல்.. கோவையில் பரபர சம்பவம்
இந்த ஓட்டலில் ஒரு ப்ளேட் பிரியாணி வாங்கினால் ஒரு ப்ளேட் ஒயிட் ரைஸ் இலவசமாக வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
கோவை: கோவையில் ஓட்டல் ஒன்றில் பிரியாணிக்கு கொசுரா ஒயிட் ரைஸ் கேட்டு தகராறில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களுக்கும், ஓட்டல் உரிமையாளருக்கும் இடையே நடந்த மோதல் ரத்தக் களரியில் முடிந்துள்ளது.
ஒரு ப்ளேட் ஒயிட் ரைஸுக்காக பல ஆயிரம் மதிப்பிலான ஓட்டல் பொருட்களும், உணவுகளும் சூறையாடப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடரும் ஓட்டல் தகராறு
தமிழகத்தில் அண்மைக்காலமாக ஓட்டல்களில் தகராறு ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதில் சில சம்பவங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. ஓசி ஃப்ரைடு ரைஸ் தராததால் ஓட்டல் உரிமையாளர் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய ரவுடிகள், சைவ ஓட்டலுக்கு வந்து சிக்கன் ரைஸ் கேட்டு ஊழியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய போலீஸார் என அன்றாடம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

பிரியாணிக்கு ஒயிட் ரைஸ் கொசுரு
அந்த வகையில், கோவையில் நடைபெற்ற ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூரில் சைவ - அசைவ ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் ஒரு ப்ளேட் பிரியாணி வாங்கினால் ஒரு ப்ளேட் ஒயிட் ரைஸ் இலவசமாக வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இந்த ஓட்டலுக்கு சூலூர் ஒண்டிப்புதூரை சேர்ந்த 3 பேர் சாப்பிட வந்துள்ளனர். அப்போது அவர்களில் ஒருவர் ஒயிட் ரைஸ் வாங்கியுள்ளார். மற்ற இருவரும் ஒரு ப்ளேட் பிரியாணி வாங்கி பங்கு போட்டு சாப்பிட்டுள்ளனர்.

ஒயிட் ரைஸ் தர முடியாது
இதனிடையே, பிரியாணி சாப்பிட்டு முடித்ததும் ஓட்டல் ஊழியரிடம் கொசுராக வழங்கப்படும் ஒயிட் ரைஸ் கேட்டுள்ளனர். ஆனால், ஓட்டல் ஊழியரோ, ஒரு ப்ளேட் பிரியாணி வாங்கி ஒருவர் சாப்பிட்டால் மட்டும்தான் ஒயிட் ரைஸ் வழங்கப்படும் என்றும், இருவர் பங்கிட்டு சாப்பிட்டதால் ஒயிட் ரைஸ் தர முடியாது எனவும் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த ஓட்டல் உரிமையாளர், வாடிக்கையாளர்களை திட்டியதாக தெரிகிறது.

ரத்தக்களரி - வழக்கு பதிவு
இதனால் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் ஓட்டலில் உள்ள நாற்காலிகள், பாத்திரங்களை கொண்டு சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் அவர்களுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இந்த சண்டையில் ஓட்டலே சூறையாடப்பட்டது. இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது இருதரப்பும் மீது தவறு இருப்பதால் அனைவரின் மீதும் போலீஸார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications