முன்னாள் எம்.பி வி.பி.சண்முகசுந்தரம் இன்று காலமானார்.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
கோவை: திமுக முன்னாள் எம்.பி வி.பி.சண்முகசுந்தரம் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.பி.சண்முகசுந்தரம் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிப்பாளையம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக 1996 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர் வி.பி.சண்முகசுந்தரம். தொடர்ந்து, திமுகவில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.

இந்நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வி.பி.சண்முகசுந்தரம் இன்று காலமானார். அவருக்கு வயது 75.
திமுக முன்னாள் எம்.பி வி.பி.சண்முகசுந்தரம் மறைந்த செய்தி அறிந்து திமுக நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தொண்டர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
“கோபிசெட்டிப்பாளையம் பாராளுமன்றத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆருயிர் அண்ணன் வி.பி.சண்முகசுந்தரம் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என திமுக எம்.பி தயாநிதி மாறன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், "தி.மு. கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.பி.சண்முகசுந்தரம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
கழகப் பற்றாளராக விளங்கிய வி.பி.சண்முகசுந்தரம் அவர்கள், 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றியவர்.
இளம் வயது முதலே கழகப் பற்றாளராக விளங்கிய அவர், கழகம் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் பங்கெடுத்தவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், கழக உடன்பிறப்புகள் என அனைவருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications