Gold Smuggling: பாலக்காடு டூ கோவை பேருந்தில் கிலோ கணக்கில் தங்கக் கட்டிகள்.. செக் வைத்த போலீஸார்
கோவை: தமிழக - கேரள எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 6 கிலோ 140 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், தமிழ்நாடு - கேரளா எல்லையை ஒட்டியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஏராளமானோர் கல்வி, தொழில், வேலை வாய்ப்பு ஆகியற்றுக்காக கோவையில் வசித்து வருகிறார்கள். கடவுளின் தேசமான கேரளா இயற்கை வளங்கள் நிறைந்தது. கேரளாவைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள்.
வெளிநாடுகளில் இருந்து ஹவாலா மற்றும் தங்கம் கடத்தலுக்கு கோவையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

தங்கம் கடத்தல்
ஹவாலா நெட்வொர்க் மற்றும் தங்கம் கடத்தலைக் கட்டுப்படுத்த கேரளாவில் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. விமான நிலையம், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாலக்காடு, திருச்சூர், கொச்சி, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஹவாலா பணம் மற்றும் தங்கம் கடத்தி செல்ல கோவை வழித்தடத்தை பயன்படுத்துகிறார்கள்.
கோவையில் இருந்து கேரளா செல்வதற்கு வாளையார், வேலந்தாவளம், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், ஆனைகட்டி ஆகிய 4 வழிகள் உள்ளன. இவற்றில் வாளையாறு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியிருப்பதால் அதை அதிகம் பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாடு - கேரளா காவல் துறை இணைந்து கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தீர்வு கிடைக்கவில்லை.
பேருந்தில் சோதனை
இந்நிலையில், தமிழக - கேரள எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 6 கிலோ 140 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், வாளையார் சோதனைச் சாவடியில் காவல் துறையினர் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி வந்த பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின்போது, நிபின் (29) என்பவர் மறைத்து வைத்திருந்த 6 கிலோ 140 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் அந்த தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர்.
தங்கக் கட்டிகள் ஒப்படைப்பு
இதுகுறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், நிபின், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருவதாகவும், கடை உரிமையாளர் ரஹ்மான் (42) என்பவர் மேற்கண்ட தங்கக் கட்டிகளை கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் ஒப்படைக்க கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, உரிய ஆவணங்களின்றி கைப்பற்றப்பட்ட தங்கக் கட்டிகள் மேல் நடவடிக்கைக்காக வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை மாவட்ட காவல் துறை சார்பில், சட்ட விரோதமான கடத்தல் மற்றும் ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பொருட்கள் தொடர்பாக தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications