ஷாக்.. அமைச்சர் பொன்முடிக்கு பேச வாய்ப்பளிக்காத ஆளுநர்? கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு பேச ஆளுநர் ஆர்என் ரவி வாய்ப்பு மறுத்துள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் அங்கு நடந்தது என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசுக்கும், தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல்கள் உள்ளன. குறிப்பாக தமிழகத்துக்கு நீட் விலக்கு வேண்டும் என தமிழக அரசு கோரி வரும் நிலையில் அதற்கு எதிராக ஆளுநர் ஆர்என் ரவி பேசி வருகிறார்.

இதுதவிர இருமொழி கல்வி கொள்கையை தமிழக அரசு விரும்பும் நிலையில் அதற்கு எதிராக மும்மொழி கொள்கை சிறந்தது என ஆளுநர் ஆர்என் ரவி பேசி வருகிறார். இதுபோல் பல விஷயங்கள் தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையே வேறுபட்ட கருத்துகள் உள்ளன. இதுதொடர்பாக அவர்கள் பேசும் கருத்துகள் அவ்வப்போது தமிழகத்தில் விவாதத்தை கிளப்பும்.
இதற்கிடையே தான் இன்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38வது பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக ஆளுநரும், பாரதியார் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்என் ரவி தலைமை வகித்தார். விழாவில் இணைவேந்தர் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதையடுத்து மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு விருந்தினரான சஞ்சீவ் சன்யாலை மட்டும் பேசும்படி ஆளுநர் ஆர்என் ரவி அழைத்தார்.இதையடுத்து அவர் மட்டுமே பேசினார். விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை பேச அழைக்கவில்லை. அவர் பேச ஆர்வமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பேச வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் அவர் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு பாரதியார் பல்கலைகழகத்தின் 37வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேசும் போது, இந்தி கற்றவர்கள் தமிழகத்தில் பானிபூரி தான் விற்பனை செய்கின்றனர் எனவும் இந்தி திணிப்புக்கு அண்ணா கூறிய குட்டி கதையை கூறி இருந்தார். இது அப்போது விவாதத்தை கிளப்பியது.
இத்தகைய சூழலில் தான் தற்போது தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்என் ரவிக்கும் கல்வி சார்ந்து விவாதங்கள் நடக்கும் நிலையில் பொன்முடிக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர இன்று காலையில் ஆளுநர் ஆர்என் ரவியின் கோவை வருகையை கண்டித்து கருப்பு கொடி போராட்டம் மற்றும் ஆளுநரை தபால்காரராக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications