கோவை: கன மழையால் பேரூரில் இரண்டு மாடி வீடு இடிந்து விழுந்து விபத்து - 2 பேர் மரணம்
கோவை: கனமழை காரணமாக கோவை பேரூரில் நேற்றிரவு இரண்டு மாடி வீடு இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கினர். ஆறுபேர் மீட்கப்பட்ட நிலையில் அதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. நேற்றிரவு பெய்த கனமழையால் கோவை பேரூர் செட்டிவீதியில் உள்ள இரண்டு மாடி வீடு இடிந்து விழுந்தது.

இந்த வீடு கண்ணன் என்பவருக்கு சொந்தமானதாகும். இந்த வீட்டில் முதல் தளத்தில், கண்ணன் தனது மனைவி ஸ்வேதா, ஆறு வயது குழந்தை தன்வீர் மற்றும் அவரது தாய் வனஜா, தங்கை கவிதா ஆகியோருடன் வசித்து வந்தனர்.
தரை தளத்தில் ஒரு குடும்பம் வாடகைக்கு வசித்து வந்தது. நேற்றிரவு பெய்த கன மழையில் பலத்த சத்தத்துடன் வீடு இடிந்து விழுந்தது. இதில் அருகில் இருந்த ஓட்டு வீடும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, மாநகர காவல்துறை ஆணையர் சுமித்சரண் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆறு வயது குழந்தை தன்வீர் மற்றும் 68 வயதான வனஜா ஆகிய இருவரும் மீட்கப்பட்டனர். இதனையடுத்து ஸ்வேதா, கோபல், கவிதா உள்ளிட்டவர்கள் மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆறுபேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஸ்வேதா, கோபால் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications