நிலமோசடி செய்த அதிமுக எம்எல்ஏ, பாஜக நிர்வாகி?.. மண்ணெண்ணெய் ஊற்றி கதறிய பெண்.. கோவையில் பரபரப்பு
கோவை: அதிமுக எம்எல்ஏ மற்றும் பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் இணைந்து தங்களது நிலங்களை மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுதாரர்களான 30 பேர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அப்போது, அதில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தனது கோரிக்கை குறித்து கதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம், கீரணத்தம் பகுதியில் காளிகோனார் என்பவருக்கு சொந்தமான 7.9 ஏக்கர் நிலம் உள்ளது. அவரது வாரிசுதாரர்கள் 30 பேர் கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், காளிகோனாருக்கு சொந்தமான அந்த இடத்தை சிங்காநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் மற்றும் பாஜக முன்னாள் கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, ஸ்ரீவாரி தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனர் பகவான் தாஸ் ஆகியோர் மோசடி செய்து விற்று வருவதாக கூறி சில தினங்களுக்கு முன்பு கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.

இப்பிரச்சனை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அந்த நிலத்தை விற்று வருவதாகவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தங்கள் புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காளி கோனாரின் வாரிசுதாரர்கள் திரண்டு புகார் மனு அளிக்க வந்திருந்தனர்.
அப்போது, வாரிசுதாரரான ஒரு பெண் அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக விரைந்து சென்ற காவல் துறையினர் அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர்.
இதுகுறித்து பேசிய வாரிசுதாரர்கள், காளிக்கோனார் என்பவருக்குச் சொந்தமான 7.9 ஏக்கர் நிலம் கீரணத்தத்தில் உள்ளது. இந்த நிலத்தை சிங்காநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் மற்றும் பாஜக முன்னாள் கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, ஸ்ரீவாரி தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனர் பகவான் தாஸ் ஆகியோர் மோசடி செய்து விற்று வருகின்றனர்.
உடனடியாக அவர்கள் மூன்று பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை நிலம் சம்பந்தமாக எந்த ஒரு செயலிலும் ஈடுபடாத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், நிலம் குறித்து பேசினால் தங்களை அவர்கள் மிரட்டுவதாகவும் தெரிவித்தனர்.
இதனிடையே மாவட்ட ஆட்சியருக்கு தமிழ் தெரியுமா என்று கேள்வி எழுப்பிய அவர்கள் ஹிந்தியில் சத்தமாக அவர்களது கோரிக்கைகள் குறித்து முன்வைத்தனர். மேலும் அதிமுக எம்எல்ஏ கேஆர் ஜெயராம், பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி அனைவரையும் திருடர்கள் என்று சாடிய அவர்கள் தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும என்று வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications