ஆளுநரிடம் மாணவர் புகார் அளித்த சம்பவம்.. உடனே பறந்த உத்தரவு.. உயர்கல்வித் துறை எடுத்த முக்கிய முடிவு
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்த மனுவை பட்டமளிப்பு விழா மேடையில் ஆளுநரிடம் மாணவர் அளித்த சம்பவம் பரபரப்பை கிளப்பியிருந்தது. இதைத்தொடர்ந்து, பேராசிரியர்களுக்கு உயர்கல்வித் துறை முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39 ஆவது பட்டமளிப்பு விழா சமீபதத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநளுர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினர்.

அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார்.
அந்த மனுவில், பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள சில வழிகாட்டிகள் ஆராய்ச்சி அறிஞர்களை ஆராய்ச்சி அறிஞர்களாகக் கருதுவதில்லை, கல்விப் பணிகளைத் தவிர, ஆராய்ச்சி அறிஞர்கள் சில வழிகாட்டிகளின் வீட்டில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிடர் விடுதிகள் உள்ளன. ஆனால் அது பொது விடுதியாக நடத்தப்படுவதால், ஆதி திராவிட (பட்டியலின சாதி) ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் மாதாந்திர மெஸ் கட்டணம் செலுத்துவதில் பெரும் சுமை உள்ளது.
வைவா நேரத்தில், ஆராய்ச்சி அறிஞர்கள் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய சில வழிகாட்டிகள் அறிவுறுத்துகிறார்கள். இதுமட்டுமின்றி, சில வழிகாட்டிகளின் நிர்ப்பந்தத்தால், வைவா வாய்ஸ் தேர்வை வெற்றிகரமாக முடித்த பின், ஆராய்ச்சி அறிஞர்கள், துறையில் உள்ள சில வழிகாட்டிகளுக்கு பணம், உணவு, தங்கம் வழங்குகின்றனர் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தெரிவித்திருந்தார்.
இந்தப் பிரச்சனைகளுக்கு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, பட்டமளிப்பு விழா நிறைவடைந்தவுடன் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள் தங்கும் விடுதியை உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் ஆய்வு மேற்கொண்டார். விடுதி மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர்.
மாணவா்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். இந்நிலையில், அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் நேற்று உயர்கல்வித் துறை சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
அதில், பல்கலையில் முனைவர் பட்டம் பெற பயிலும் மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும். வழிகாட்டு ஆசிரியரின் தனிப்பட்ட அல்லது வீட்டு வேலைகளை செய்ய மாணவர்களை வற்புறுத்தக் கூடாது. பாதிக்கப்படும் மாணவர்கள் பல்கலைக்கழங்களில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்று பேராசிரியர்கள் மீது குற்றச்சாட்டு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வித் துறை எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications