என்ன கொடுமை இது.. 2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்
கோவையில் ரத்தம் ஏற்றியதால் 2 வயது பெண் குழந்தைக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோயம்புத்தூர்: கோவை அரசு ஆஸ்பத்திரியில் 2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டுள்ளதாக பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது தமிழகத்தை திரும்பவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி பாதித்த ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் எழுந்த விவகாரம் பெரும் பரபரப்பானது. இந்த நிலையில் இதே போன்ற ஒரு பிரச்சனை கோவையில் எழுந்துள்ளது.
திருப்பூரை சேர்ந்த தம்பதி விஸ்வநாதன்-புஷ்பா. இவர்களின் பெண் குழந்தைக்கு இருதய நோய் பாதிப்பு இருந்ததால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்து இருக்கிறார்கள்.
செய்தியாளர்கள் சந்திப்பு
ஆனால் ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு எச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்டதாக குழந்தையின் பெற்றோர் பகீர் புகார் அளித்துள்ளனர். இது சம்பந்தமாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் சொன்னதாவது: "கடந்த 11-02-2018 அன்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருதய நோய் பாதிக்கப்பட்ட எங்கள் குழந்தைக்கு ரத்தம் ஏற்றப்பட்டது.
ரத்தம் ஏற்றினார்கள்
அந்த ரத்தத்தின் மூலம் என் குழந்தைக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ரத்தம் ஏற்றும்போது நான் கூடவே இருந்தேன். அதுவும் இல்லாமல், கோவை அரசு ஆஸ்பத்திரியை தவிர வேறு எங்கும் குழந்தையை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லவும் இல்லை.
சிபிசிஐடி விசாரணை
எனக்கும், என் மனைவிக்கும் எச்ஐவி பாதிப்பு இல்லை. இது சம்பந்தமான டெஸ்ட் எடுத்து ரிப்போர்ட்டும் கையில் வைத்துள்ளோம். எங்கள் இருவருக்கும் எச்ஐவி பாதிப்பு இல்லாத போது என் குழந்தைக்கு மட்டும் எப்படி இந்த பாதிப்ப ஏற்பட்டது? இது சம்பந்தமான சிபிசிஐடி விசாரணை தேவை" என கோரிக்கை விடுத்தனர்.
நிர்வாகம் மறுப்பு
ஆனால் இந்த குற்றச்சாட்டை ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது. குழந்தைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் ஏற்றப்பட்டது உண்மைதான் என்றும் ரத்த சிகப்பணு மட்டுமே குழந்தைக்கு ஏற்றப்பட்டது என்றும் டீன் அசோகன் விளக்கம் அளித்திருக்கிறார். மேலும் இதனால் ஒன்றும் எச்ஐவி பரவாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.