கோவை பெண் சடலம் விவகாரம்.. சினிமா பாணியில் துப்பறிந்த போலீஸ்.. மெக்கானிக் ஷெட்டில் கிடைத்த எவிடென்ஸ்
கோவை: கோவையில் சாலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய டிரைவரை போலீஸார் எப்படி கண்டுபிடித்தார்கள் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
செப்டம்பர் 6 ஆம் நாளன்று சின்னியம்பாளையத்தில் கார் மோதி பெண் உயிரிழப்பு நடந்தது. அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது ஏதோ காரில் இருந்து சடலம் விழுந்தது போல் தெரியவந்தது.
இந்த நிலையில் அந்த கார் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து வாகன ஓட்டுநரை பிடிக்க திருவள்ளூர் போலீஸை நாடியிருந்தன.

விபத்து
இந்த திருவள்ளூர் கார் இந்த விபத்தை ஏற்படுத்தவில்லை என தெரியவந்தது. இதையடுத்து மீண்டும் கோவை வந்த தனிப்படை போலீஸ் காணாமல் போனோர் பட்டியலையும், கார் பழுது நீக்கும் மெக்கானிக் கடைகளிலும் காரை தேடி வந்தனர். இந்த நிலையில் கேமரா காட்சிகளை கொண்டு போலீஸ் தேடுதல் வேட்டை நடத்தினர்.

தனிப்படைகள்
இறந்த பெண் மீது ஏறிய காரை கண்டுபிடிக்க இரண்டு தனிப்படைகளை அமைத்த போலீஸ் நள்ளிரவு அந்த கார் ஓட்டுநர் காளப்பட்டியைச் சேர்ந்த ஃபைசலை கைது செய்தனர். பலியான பெண்ணின் சேலை காரின் சக்கரத்தில் மாட்டியிருப்பதை பார்த்து அந்த காரை கண்டுபிடித்து அதன் ஓட்டுநரை கைது செய்தனர்.

அதிகாலை
அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 6ஆம் தேதி அதிகாலை சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது ஃபைசலின் கார் மோதியிருக்கிறது. சூலூர்பட்டினத்தில் காரை பழுது நீக்க மெக்கானிக் கடையில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் போலீஸாரிடம் ஃபைசல் சிக்கினார். முதலில் தான் எந்த விபத்தையும் செய்யவில்லை என ஃபைசல் சாதித்த நிலையில் காரிலிருந்த சக்கரத்தின் பக்கவாட்டில் ஒரு துணி மாட்டியிருப்பதை போலீஸார் பார்த்தனர்.

ஃபைசல் கைது
அந்த துணியும் பெண்ணின் சேலையும் ஒன்று என்பதால் போலீஸார் ஃபைசலை நள்ளிரவில் கைது செய்து விபத்து பற்றி விசாரணை மேற்கொண்டு நடத்தினார்கள். இன்று அவர்கள் ஃபைசலை போக்குவரத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சாலையை கடக்க முயன்ற பெண்ணை மோதிவிட்டு நிற்காமல் சென்றதோடு வழக்கிலிருந்து தப்ப நினைத்த ஃபைசல் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

ஆதரவற்றவர்
இந்த விபத்தில் உயிரிழந்த பெண் கோவையில் ஆதரவற்றவர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். அந்த பெண் அதிகாலை நேரத்தில் எங்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார்? ஃபைசல் வாகனத்தை போக்குவரத்து விதிகளுக்கு உள்பட்டு ஓட்டினாரா என்பது குறித்தெல்லாம் விசாரணை நடத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications