ரூ.50,000 பணம், 8 கிராம் தங்கம்.. திருமண உதவித் தொகையை தமிழ்நாட்டில் இப்போது எப்படி பெறுவது?
கோவை: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம் நிறுத்தப்பட்டு, அந்த நிதியில்தான் புதுமைப்பெண் என்ற திட்டத்தின் கீழ் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 50000 பணம், 8 கிராம் தங்கம் தற்போது எப்படி வழங்கப்படுகிறது என்பதை பார்ப்போம்.
ஏழை எளிய பெண்கள் பயன்பெறும் நோக்கில் தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் பட்டப்படிப்பை முடித்த பெண்களுக்கு திருமண உதவி தொகையாக 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரமும், பட்டப்படிப்பு முடிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் எல்லாருக்கும் இப்போது கிடையாது. ஏனெனில் கடந்த 2022-2023 -ம் ஆண்டு முதல் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம் நிறுத்தப்பட்டது. அந்த திட்டத்திற்கு பதிலாக புதுமைப்பெண் என்ற திட்டத்தின் கீழ் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதி வழங்கப்பட்டு வருகிறது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டப்படி தான் அனைத்து தரப்பு பெண்களும் திருமண உதவி தொகை பெற்று பயன்பெற்று வந்தார்கள். இப்போது அரசு அந்த திட்டத்தினை செயல்படுத்தாமல் புதுப்பெண் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

எனினும் மிகவும் ஏழை பெண்கள் பயன்பெறும் வகையில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மொத்தம் நான்கு திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம், மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் ஆகிய 4 திட்டங்களின் கீழ் திருமண உதவித் தொகையும், தலா 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது.
அதாவது ஏழை விதவை பெண்களை மறுமணம் செய்து வைக்கும் போது அவர்களுக்கு தங்கம் மற்றும் உதவி தொகை வழங்குகிறது. அதேபோல் ஏழை விதவை பெண்களின் மகள்களை திருமணம் செய்தால் தங்கம் மற்றும் உதவி தொகை வழங்குகிறது. இதேபோல் ஆதரவற்ற பெண்களை திருமணம் செய்தாலும் அரசு 8 கிராம் தங்கம் மற்றும் 50 ஆயிரம் உதவி தொகை வழங்குகிறது. இதேபோல் கலப்பு திருமணம் செய்தாலும் அரசு அவர்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் 50 ஆயிரம் உதவி தொகை வழங்குகிறது. இந்த நான்கு திட்டத்தின் கீழ்நிதியுதவி மற்றும் தங்கம் பெற விரும்புவோர், உரிய சான்றிதழ்களுடன் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகங்களை அணுகலாம்.
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம், மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் ஆகிய அந்த 4 திட்டங்களின் கீழ் கோவை மாவட்டத்தில் 370 பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்தின் கீழ் தற்போது பெண்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுவது இல்லை. மீதமுள்ள 4 திட்டத்தின் கீழ் திருமண உதவி வழங்கப்படுகிறது.
இதில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படும். பட்டப்படிப்பு முடிக்காத பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. இந்த 4 திட்டங்களின் கீழ் கோவை மாவட்டத்தில் 370 பெண்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட இருக்கிறது. இதற்கான தங்கம் வந்து விட்டது. நிதி உதவித்தொகை தயார் செய்யப்பட்டு வருகிறது. கலப்பு திருமண உதவி திட்டத்தில் கலப்பு திருமண தம்பதிகளின் துணைவர்களில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருக்க வேண்டும். அதே சமயம் மற்ற ஒருவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மற்றொரு வகையில் வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் முன்னேறிய அல்லது பொதுப்பிரிவை சேர்ந்தவர்களாகவும், மற்ற ஒருவர் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறினார்.












Click it and Unblock the Notifications