கோவை அருகே மளிகை கடைக்கு விறுவிறுன்னு போன மேத்யூ.. தங்கத்தை பார்த்து தடுமாறிய மனசு.. கடைசியில் ஆப்பு
கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் மளிகை கடையில் பொருள் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நகை திருடர்கள் பல்வேறு வித்தியாசமான திட்டங்களை கையாள்கிறார்கள்.. சாலையில் செல்லும் பெண்கள் நகை அணிந்திருந்தால், அவர்களிடம் பறிக்க முடியுமா என்று பார்க்கிறார்கள். அப்படி பார்த்த உடன் சில நிமிடங்களில் திட்டமிட்டு, ஆள் இல்லாத இடத்தில் நடந்து செல்லும் போது, கண் இமைக்கும் நேரத்தில் கழுத்தில் கிடக்கும் நகையை பறித்துவிட்டு எஸ்கேப் ஆகிறார்கள்.

சிசிடிவி காட்சிகள், பைக் எண் போன்ற பல்வேறு விஷயங்கள் இருந்தாலும், தவறான நம்பர் பிளேட்டை பொருத்திக்கொண்டு, ஹெல்மெட் அணிந்தபடி, நகைகளை பறித்துவிட்டு பறக்கிறார்கள். அப்படி நகை பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரமாக முயற்சி செய்தாலும், சில நேரங்களில் சிசிடிவி காட்சிகள் அல்லது, சரியான அடையாளம் கிடைக்காத காரணத்தால் தப்பி விடுகிறார்கள்.
அதேநேரம் சிசிடிவி காட்சிகள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகள் இருக்கும் போது குற்றவாளிகளை அடையாளம் காணும் போலீசார் அவர்களை பிடித்துவிடுகிறார்கள். அப்படித்தான் அன்னூர் மளிகை கடையில் பொருள் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்த 49 வயதாகும் தனலட்சுமி (வயது 49), அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த மே 23-ந் தேதி இவரது கடையில் வியாபாரம் செய்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர், தனலட்சுமியின் மளிகை கடையில் பொருட்கள் வாங்குவது போல் வந்து அவரின் கழுத்திலிருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு வாகனத்தில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளார்.
இதையடுத்து தனலட்சுமி அன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், பெண்ணிடம் நகை பறித்தது கோவையை சேர்ந்த சேவியர் அமல்ராஜ் மகன் பிலிப் மேத்யூ (வயது 23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். வேறு திருட்டில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அவரிடம் அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications