“மிஸ்டர் பழனிசாமி.. செந்தில் பாலாஜி அவரா கோவைக்கு வரல.. நான் டூட்டி போட்டிருக்கேன்”- ஸ்டாலின் பேச்சு
கோவை: "கோவைக்கு செந்தில் பாலாஜி வந்தது முதல், பழனிசாமி பயந்த சாமியாக புலம்பிக் கொண்டிருக்கிறார். மிஸ்டர் பழனிசாமி.. செந்தில் பாலாஜி அவராக கோவைக்கு வரவில்லை.. நான்தான் வரவைத்தேன். கோவையிலும் வெற்றியை உறுதி செய்யவே செந்தில் பாலாஜிக்கு கோவையில் டூட்டி போட்டிருக்கிறேன்" என முதல்வர் ஸ்டாலின் கோவையில் இன்று பேசியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள சூழலில், பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் இன்று இரவு கோவையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார். "வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்" என்ற பாடலுடன் பிரச்சாரத்தை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "கோவைக்கு செந்தில் பாலாஜி வந்தது முதல், பழனிசாமி பயந்த சாமியாக புலம்பிக் கொண்டிருக்கிறார். மிஸ்டர் பழனிசாமி.. செந்தில் பாலாஜி அவராக கோவைக்கு வரவில்லை.. நான்தான் வர வைத்திருக்கிறேன். கரூரில் திமுகவின் வெற்றி கன்ஃபார்ம். கோவையிலும் வெற்றியை உறுதி செய்யவே செந்தில் பாலாஜிக்கு கோவையில் டூட்டி போட்டிருக்கிறேன்.
"ஆட்டோ ஓட்டுர மாணிக்கம் மாதிரி அமைதியா தேர்தல் வேலை பார்த்துட்டு இருந்தோம். சொல்றத கேக்காம கறுப்புச் சட்டம் கொண்டு வந்து நமக்குள்ள இருந்த பாட்ஷாவ வெளிய கொண்டு வந்துட்டாங்க. அதாவது 50, 60கள்ல இருந்த திமுகவை திரும்ப வர வெச்சிட்டாங்க. இனி எங்களை யாராலும் தடுக்க முடியாது" எனப் பேசியுள்ளார் ஸ்டாலின்.
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "டபுள் எஞ்சின் அரசு இருந்தால்தான் வேலைகள் விரைவாக நடக்கும் என்று கோவையில் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. உங்கள் வேகம் எப்படி இருக்கும் என மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைப் பார்த்தே தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்திருப்பார்கள்! தங்களின் வருகைக்கு நன்றி! அடுத்ததாக, அடுத்த தேர்தல் சீசனில் சந்திப்போம்.
"கருப்புச் சட்டை அணிந்து கருப்புக் கொடி ஏற்றினால் தொகுதி மறுவரையறை நின்றுவிடுமா?" எனக் கேட்டுச் சிரித்த பழனிசாமி கும்பலைப் பார்த்து இன்றைக்கு இந்தியாவே சிரிக்கிறது.
பழனிசாமி அவர்களே, இனி பா.ஜ.க.வின் சட்டங்களுக்கு முட்டு கொடுக்கும்போது முந்திரிக்கொட்டை போல முந்திக் கொள்ளாதீர்கள். பொறுத்திருந்து, பார்த்துப் பக்குவமாக முட்டு கொடுங்கள். இல்லையென்றால் இப்படித்தான் மூக்குடைபடுவீர்கள்" என்று தெரிவித்தார்.













Click it and Unblock the Notifications