திடீரென கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி!
கோவை: அமைச்சர் ஐ.பெரியசாமி கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திடீரென கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் காலம் முதலே திமுகவில் இணைந்து செயல்பட்டு வரும் ஐ.பெரியசாமி, திமுகவின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர். 1973 திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது வத்தலகுண்டுக்குள் எம்ஜிஆரை நுழைய விட மாட்டேன் என்று அறிவித்து தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்தார்.

அதன்பின் 1980களில் திமுகவுக்கு நிதி திரட்டி கொடுப்பதில் முக்கிய பங்கு வைத்தார். 1989 தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ-வான ஐ.பெரியசாமி, திமுக மாவட்டச் செயலாளர் தேர்தலிலும் மிகப்பெரிய நிர்வாகிகளான மாயத்தேவர் மற்றும் முத்துச்சாமியை வீழ்த்தி வென்றார். அதன்பின் 1996 திமுக ஆட்சிக்கு வந்த பின் ஐ.பெரியசாமி முதல்முறையாக அமைச்சராக பொறுப்பேற்றார்.
அதன்பின் திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவின் அடையாளமாக ஐ.பெரியசாமி மாறினார். தற்போது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக ஐ.பெரியசாமி செயல்பட்டு வரும் நிலையில், கடந்த மாதம் இவரது வீடு, அலுவலகம் மற்றும் இவரின் மகன் வீடு, அலுவலகம் உள்ளிட்டவற்றில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
இதன்பின் வழக்கம் போல் தனது பணிகளில் தீவிரம் காட்டி வந்த அமைச்சர் ஐ.பெரியசாமி, தேர்தல் பணிகளிலும் கவனம் கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 72 வயதாகும் ஐ.பெரியசாமிக்கு வயது முதிர்வு காரணமாக ஏதேனும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications