உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? கோவையில் பெண் முகத்தில் ஆசிட் வீசிய கும்பல்
கோவை: கோவை அருகே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணின் முகத்தில் மர்ம கும்பல் ஆசிட் வீசியுள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் பல மாநிலங்களில் பெண்களின் முகத்தில் ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் இதுபோன்ற ஒரு சில சம்பவங்கள் நடைபெற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் வாழ்வை தொலைத்துவிட்டதாக கருதுவதோடு வெளியிடங்களுக்குச் சென்று தங்கள் முகத்தை காட்டவே அல்லல்படும் அவல நிலையும் நீடித்து வருகிறது. மேலும் பார்வைக் குறைபாடு உள்ளிட்ட இன்னல்கள் ஏற்படுவதோடு, சில சமயங்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதும் நிகழ்ந்துள்ளது.

பெண் முகத்தில் ஆசிட் வீச்சு
இந்த நிலையில் கோவையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் மீது மர்ம கும்பல் ஒன்று ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படுகாயமடைந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

தனியே வசித்த பெண்
தர்மபுரியை சேர்ந்த ஸ்டாலின் என்பவரது மனைவி ராதா . இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். ராதாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து தனது கணவரை பிரிந்த ராதா 8 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். பின்னர் அம்மன் குளம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

முகத்தில் ஆசிட் வீச்சு
நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய ராதா அந்தப் பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பால் வாங்குவதற்காக சென்றார். பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது வீட்டின் அருகே இருட்டில் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் ராதாவின் முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் ராதாவின் வலது பக்க முகம், தோள்பட்டை இடதுகை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது.

போலீசார் விசாரணை
இதனை பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 3 தனிப்படைகள் அமைத்து இளம்பெண் மீது ஆசிட்டை வீசி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். ராதாவின் கணவர், ஆள் வைத்து இதைச் செய்தாரா அல்லது ராதாவிற்கு பழக்கமானவர்கள் யாரேனும் இதைச் செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications