கோவை to அபுதாபி.. இனி நேரடியா பறக்கலாம்.. ஏர்போர்ட்டில் இண்டிகோ விமானத்துக்கு “வாட்டர் சல்யூட்”!
கோவை: கோவை - அபுதாபி இடையே இன்று முதல் நேரடி விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில், அபுதாபியில் இருந்து கோவை வந்த இண்டிகோ விமானத்திற்கு தண்ணீரை பீச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவையில் இருந்து அபுதாபி சென்ற விமானத்தில் 168 பயணிகள் பயணித்து அபுதாபி சென்றுள்ளனர்.
கோவையில் இருந்து இந்தியாவின் பல நகரங்களுக்கும், சிங்கப்பூர், இலங்கை மற்றும் சார்ஜா ஆகிய நாடுகளுக்கும் விமான போக்குவரத்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல மற்ற நாடுகளுக்கும் விமான போக்குவரத்து கோவையில் இருந்து துவங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. குறிப்பாக கோவையைச் சேர்ந்த தொழில் துறையினர், அபுதாபிக்கு நேரடி விமான சேவை தொடங்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கோவை - அபிதாபி இடையே இன்று முதல் விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. இன்று (ஆகஸ்ட் 10 ஆம் தேதி) காலை சுமார் 163 பயணிகளுடன் இண்டிகோ விமானம் அபுதாபியில் இருந்து கோவைக்கு விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் 163 பயணிகள் கோவைக்கு வந்தனர்.
அபுதாபியில் இருந்து நேரடியாக கோவை வந்த இந்த விமானத்துக்கு கோவை விமான நிலைய தீயணைப்பு படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று காலை 7.40 மணியளவில் இண்டிகோ விமானம் கோவை விமான நிலையத்தில் இருத்து அபுதாபிக்கு புறப்பட்டது. கோவையில் இருந்து 168 பயணிகளுடன் விமானம் அபுதாபி புறப்பட்டுச் சென்றது.
வாரம்தோறும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் கோவையில் இருந்து அபுதாபிக்கு விமான சேவையானது வழங்கப்பட இருப்பதாகவும், குறைந்த அளவில் சரக்கு சேவையும் இந்த விமானத்தில் உள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் இண்டிகோ விமானம், பிற்பகல் 11:30 மணிக்கு அபுதாபி சென்றடையும். அபுதாபியில் பிற்பகல் 1 மணிக்கு கிளம்பும் இண்டிகோ விமானம், மாலை 6.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடையும்.
புதிதாக துவங்கப்பட்டுள்ள கோவை - அபிதாபி நேரடி விமான சேவை மூலம், வியாபாரத்திற்காக அபுதாபிக்குச் செல்லும் கோவையைச் சேர்ந்த தொழில்துறையினர் மிகுந்த பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சில நாடுகளுக்கும் கோவையில் இருந்து விமானங்களை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விமான நிலைய விரிவாக்கத்திற்குப் பின்னர் வரவேற்பைப் பொறுத்து மேலும் சில நாடுகளுக்கும் விமான சேவை விரிவுபடுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications