"மூடப்படும் ஆதியோகி சிலை.." பராமரிப்பு பணிகளால் மே 30ஆம் தேதி மக்கள் வருகையை தவிர்க்க அறிவுறுத்தல்
கோவை: வரும் மே 30-ஆம் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ஈஷாவில் தியான லிங்கம் மற்றும் ஆதியோகி வளாகங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா மையம் இயங்கி வருகிறது. உலகில் எந்தவொரு நபருக்கும் உடல் நலனுக்கு இணையாக மனநலனும் ரொம்பவே முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
அதிலும் கொரோனா காலத்திற்குப் பின்னரே மனநலன் நமக்கு எந்தளவுக்கு முக்கியமானது என்பது தெரிய வருகிறது. அதன்படி மனநலனை மேம்படுத்த பல்வேறு வழிகள் இருக்கிறது. அதில் முதன்மையான வழி யோகா.

அதன்படி கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. இயற்கையான சூழலில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஈஷா யோகா மையத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர்.
அதிலும் குறிப்பாக இங்கே இருக்கும் தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதியோகியை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இங்கே மகா சிவராத்திரி விழாவும் நடைபெறும். இதில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் நாட்டின் முக்கியமானவர்கள் கலந்து கொள்வார்.

இந்நிலையில், ஆண்டுதோறும் நடைபெறும் பராமரிப்பு பணிக்காக ஈஷா வளாகம் வரும் மே 30-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் மூடப்பட உள்ளது. இதன் காரணமாக தியானலிங்கம் மற்றும் ஆதியோகி வளாகங்கள் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும். எனவே, அன்றைய தினம் பக்தர்கள் ஈஷாவிற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதேநேரம் மே 31-ஆம் தேதி முதல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஈஷா யோகா மையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications